Friday 28 February 2014

உங்களைத் தேடி இஸ்ரோ...
- எல்.முருகராஜ்

விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதற்கும்,அவற்றை நாட்டு நலனிற்கு பயன்படுத்தவும் அமைக்கப்பட்டதுதான் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இந்தியன் ஸ்பேஸ் ரீசர்ச் ஆர்கனைசேஷன்- இஸ்ரோ).

1969ம் வருடம் உருவாக்கப்பட்ட இஸ்ரோவானது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்களையும், ஏவுதளங்களையும் கொண்டுள்ளது. மொத்தத்தில் 16 ஆயிரம் பேர் ஆராய்ச்சி பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இதன் தலைவராக இருப்பவர் கே.ராதாகிருஷ்ணன்.

உலகில் உள்ள மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் நமது இஸ்ரோ ஆறாவது இடத்தில் உள்ளது.

கடந்த 1975ம் ஆண்டு இந்தியா தனது முதல் செயற்கை கோளான ஆர்யபட்டாவை சோவியத் நாட்டின் உதவியோடு அங்கு இருந்தே ஏவியது.

1990ம் ஆண்டு எஸ்எல்வி 3 என்ற ரோகிணி ஏவுகலம் (ராக்கெட்) இந்தியாவில் இருந்தே ஏவியது.

அதன்பிறகு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ஏவுகலங்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

கடந்த 2008ம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திராயன்-1 ஏவுகலம் தற்போது உலக அரங்கில் இந்தியாவை பிரமிப்புடன் பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஆரம்பத்தில் சோவியத் நாட்டின் உதவியோடு அவர்களது தொழில் நுட்பம் மற்றும் உபகரணங்களுடன் சோவியத் நாட்டின் ஏவுதளத்தில் இருந்தே ஏவுகலத்தை அனுப்பிய இந்தியா, தற்போது இந்தியா தொழில் நுட்பத்தில் இந்திய உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்தே பல ஏவுகலங்களை ஏவிவிட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் மற்ற நாட்டின் ஏவுகலங்களையும், துணைக்கோள்களையும் நமது ஏவுகலத்தின் துணையோடு அனுப்பிவைத்து வருகிறது.

கடந்த வாரம் ஒரு பெருமைப்படத் தக்க செய்தி வெளியானது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நமது இஸ்ரோ மையத்துடன் இணைந்து தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடப்போகிறது என்பதுதான்.

இப்படி உலக அரங்கில் பெருமையுடன் பீடு நடைபோடும் இஸ்ரோவிற்கு நாடு முழுவதும் உள்ள மையங்களில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் உள்ள மகேந்திரகிரி மையமும் ஒன்றாகும்.

இது திரவ இயக்க அமைப்பு மையமாகும்.

பொதுவாக ராக்கெட்டின் கூரான தலைப்பகுதியில்தான் சேட்டிலைட் எனப்படும் ஆராய்ச்சி செய்யும் கருவிகள் அடங்கி இருக்கும். இந்த சேட்டிலைட்டை கொண்டு செல்ல பயன்படும் ராக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவிதமான எரிபொருளைக்கொண்டு மேலே உந்தி செல்லும், கடைசி உந்துதல் திரவ எரிபொருளால் செயல்படும்.

இந்த திரவ எரிபொருளின் உந்து சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான வேலைகள் மகேந்திரகிரியில் நடைபெறுகின்றது. இங்கு நிரந்தரமாக 600 பேரும் ஒப்பந்த தொழிலாளர்களாக 1000 பேரும் பணியாற்றுகின்றனர்.

இந்த மகேந்திரகிரிக்குள் ஒரு அருமையான கண்காட்சி கூடம் உள்ளது.

இந்த கண்காட்சிக்குள் நுழைந்து வெளியே வரும் போது ராக்கெட்டால் (ஏவுகலம்) மக்களுக்கு என்ன பயன், மகேந்திரகிரியில் நடைபெறும் வேலைகள் என்ன, உங்கள் எடை பூமியில் ஒரு மாதிரியும் மற்ற கிரகங்களில் வேறு மாதிரியும் இருப்பதன் காரணம் என்ன என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது. விடைகளுக்கு சான்றாக நிறைய ராக்கெட் மாதிரிகள் அது தொடர்பான சார்ட்டுகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு சின்ன உதாரணம் கடலுக்குள் மீன் பிடிக்க செசல்லும் மீனவர்கள் முன்பெல்லாம் மனம் போன போக்கில் மீன்களை தேடிப்போவார்கள், இப்போது அப்படி இல்லை விண்ணில் வலம்வரும் இந்திய செயற்கை கோளானது எங்கே மீன்கள் இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்லிவிடும் மீனவர்கள் நேரடியாக அங்கு சென்றால் போதும். தவிர இன்றைய மொபைல் போன் டெக்னாலாஜி உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்பு ஆச்சர்யங்கள் எல்லாம் செயற்கை கோள்களின் துணையால்தான்.

இப்படி நமது ராக்கெட் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகிறது மகேந்திரகிரி இயக்க அமைப்பு மைய மைய கண்காட்சி கூடம்.

இவ்வளது சிறப்பு வாய்ந்த இந்த கண்காட்சி கூடத்தை மக்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு போய் சேர்த்தால் என்ன என்று தினமலர் வழிகாட்டி குழுவினர் எண்ணினர்.

இந்த எண்ணம் முதன் முறையாக இப்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவியருக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரையில் வருகின்ற மார்ச் மாதம் 26,27,28; கோவையில் 28,29.30; திண்டுக்கல்லில் 30,31; புதுச்சேரியில் ஏப்ரல் 4,5,6; சென்னையில் 4,5,6; ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இந்த வழிகாட்டி அரங்கின் வளாகத்தினுள் இஸ்ரோவின் மகேந்திரகிரி மையத்தின் கண்காட்சி அரங்கம் தனியாக இடம் பெற உள்ளது. வழிகாட்டி நடைபெறும் நாட்களில் மையத்தின் விஞ்ஞானிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்காட்சி பற்றி விளக்கங்கள் தர இருக்கின்றனர்.

ஆகவே இந்த முறை மாணவ, மாணவியர் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும் கூட வழிகாட்டி நிகழ்ச்சிக்கு மறக்காமல் அவசியம் வாருங்கள் ,நமது நாட்டின் பெருமையை பாருங்கள், இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9944309655.











No comments:

Post a Comment