Monday 31 March 2014

பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்..

பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்..
- எல்.முருகராஜ்









"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே''
இது கங்கைக்குத் தங்கக் கவிதா மகுடம் சூட்டி பாரதி பாடிய வரிகள்.

இதன் மூலம் அவர் காசியையும், கங்கையையும் எந்த அளவு நேசித்திருப்பார் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

39 வயது வரை வாழ்ந்த உலக மகா கவி பாரதியின் தன் வாழ்க்கையின் இளமைப் பிராயமான 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903) காசியில் தங்கி கல்வி கற்றதுதுடன் கலை கலாச்சார பொது அறிவு விஷயங்களையும் பெற்றார்.

1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.

காசியில் கங்கை கரையோரம் உள்ள வீட்டில் அத்தை மாமாவோடு தங்கலானார். பின்னர் காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். அலகாபாத் சர்வ கலாசாலை பிரவேசப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, பலரும் பாராட்டும் நிலை அடைந்தார். பாரதியின் உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு அப்போதே வியந்தார்கள்.

கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். காசி வாசம், பாரதி உள்ளத்தில் ஒரு புதிய இனம் தெரியாத பரவசத்தை ஊட்டிற்று. காசி நகரில், பல இடங்களுக்கும் சென்று வருவது அவருக்கு வழக்கமாயிற்று. நடந்தேதான் செல்வார்.

வீடு என்று இருந்தால் வரி கட்ட வேண்டும் அதுவே மடம் என்று இருந்தால் வரி விலக்கு உண்டு. இது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் சட்டம்.இந்த சட்டத்திற்காக பாரதியின் மாமா தனது வீட்டை சிவ மடம் என்றாக்கினார். நிறைய பண்டிதர்கள் வந்து போவார்கள். பண்டிதர்களிடையே பாரதி எப்போதுமே தீவிரமாக பேசுவார் அதிலும் குறிப்பாக பெண் விடுதலை, பெண் கல்வி குறித்து காரசாரமாக விவாதிப்பார். இவர் ஒரு ஞானவான் என்பதை மட்டும் உணர்ந்தவர்கள் அதற்கு மேல் இவரை உயர்த்த முடியாததால் பின் அங்கு இருந்து கிளம்பி மீண்டும் எட்டயபுரம் வந்தார்.

பாரதி தனது உடையிலும் தோற்றத்திலும் மாற்றத்தை உருவாக்கி கொண்டது காசியில்தான். இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம். இந்த பழக்கம்தான் பாரதிக்கு பிற்பாடு எங்கு சென்றாலும் தொடர்ந்திருக்கலாம். ஒருமுறை அல்ல ஒரு நாளின் பலமுறை பாரதி கங்கையில் நீராடுவதும் கரையில் இருந்தபடி காளிதாசர், ஷெல்லி, கீட்ஸ் கவிதைகளை படிப்பதுமாக இருப்பார். கங்கை கரை படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.

இப்படி பாரதியின் நெஞ்சுக்குள் பாய்ந்து ஒடிக்கொண்டிருந்த தொன்மையான கங்கையையும் அவர் நேசித்த காசியையும் பற்றி நிறைய முறை கேள்விப்பட்ட எனக்கு கடந்த வாரம் அவர் வாழ்ந்த அந்த காசியின் வீட்டை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து அனுமான் காட் என்றால் நூறு ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு போய் இறக்கிவிடுவர். அங்குள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக சிவ மடம் என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழங்கால வீடு ஒன்று உள்ளது.

மாட்டின் எச்சமும், குப்பை கூளமும் நிறைந்த நெரிசலான சந்துக்குள் அமைந்திருக்கும் அந்த பழைய வீட்டிற்கு எப்படி பார்த்தாலும் இருநூறு வயதிருக்கும்.

அதிர்ந்து பேசினாலே வீட்டின் காரை சுவர்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு பழமை மாறாமல் அப்படியேதான் பல இடங்களும் உள்ளது.

அந்த வீட்டில் பலர் இருந்தாலும் நின்று பேச நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
அந்த வீட்டில் பாரதியின் பெருமைகளையும்,நினைவுகளையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரே ஜீவன் கே.வி.கிருஷ்ணன் என்பவர்தான். பாரதியாரின் அப்பாவுடன் பிறந்த குப்பம்மாள் மகள் வழி பையனான இவருக்கு இப்போது வயது 88 ஆகிறது. பாரதி இங்கு இருந்த போது அவர் பிறக்கவேயில்லை.

காசியில் பிறந்து வளர்ந்தவரான இவர் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழைவிட இந்தியில் திறமை அதிகம்.இசையிலும் புலமை உண்டு.
பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் உதவியுடன் பாரதிக்கு சிலை அமைக்கவும் செய்தார்.

பாரதியின் மாப்பிள்ளை என்பதே என் பாக்கியம் அதைவிட வேறு எதுவும் வேண்டாம் என்ற நிலையில் உள்ளவர்.தற்போது மிகவும் தளர்ந்து போய் உள்ளார். கேட்கும் திறனும் குறைந்து விட்டது.

ஆனாலும் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து ஒருவன் பாரதி வாழ்ந்த வீட்டை பார்வையிட வந்துள்ளானே என்ற ஆர்வம் காரணமாக சிரமப்பட்டு எழுந்து பாரதி உலாவிய இடங்கள் இவை, அவர் உபயோகித்த பொருட்கள் இவை என்று பழுதடைந்து, பாழடைந்த கிடந்த நாற்காலி மேஜை போன்றவைகளை தூசு தட்டி காண்பித்த போது அந்த இடம் பாரதி வாழ்ந்த இடமாக அல்ல இப்போதும் வாழும் இடமாகவே பட்டது.
முன்பு காரைச்சுவர்களுக்குள் இருந்தார் இப்போது இவரது இதய சுவர்களுக்குள் இருக்கிறார்.


சையத்தின் மேக்ரோ போட்டோகிராபி
- எல்.முருகராஜ்

புதியவர்களுக்கு குலாம் சையத் அலி பழகியவர்களுக்கு கபீர்.

மதுரையில் பிறந்தவர் திருச்சியில் வளர்ந்தவர். 

ராட்சத பாய்லர்கள் உள்ளிட்ட பெரிய இரும்பு சாதனங்கள் துருப்பிடிக்காமல் இருக்க ஒருவித பெயின்ட் பூசுவார்கள். இந்த பெயின்ட் பூச்சு என்பது சரியான கலவை மற்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். இதை கண்காணிப்பதற்கென பிரேத்யேக படிப்பு உண்டு. அந்த படிப்பை படித்து விட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்தவர் சமீபத்தில் தாயகம் திரும்பியிருக்கிறார்.

நீண்டகாலம் வெளிநாடுகளில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட களைப்பு நீங்கும் வகையில் தற்போது திருச்சியில் இருக்கும் சையத்தின் மனதை இலகுவாக்கும் விஷயங்களில் ஒன்று கேமிராவில் படம் எடுப்பது.

இதற்காக கேனன் சிறிய ரக கேமிரா ஒன்றை வாங்கியவர் தன் வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷயங்களை படமாக்க ஆரம்பித்தார். இந்த படங்களை பார்த்த உறவினர்களும், நண்பர்களும் பாராட்டுகளை வழங்கினர்.

மேலும் படங்கள் எடுக்கும் போதும் எடுத்த படங்களை பார்க்கும் போதும் ஏற்படும் சந்தோஷம் தனக்கு அளவிடமுடியாததாக இருக்கிறது. அதிலும் இவருக்கு " மேக்ரோ போட்டோகிராபி 'என்று சொல்லக்கூடிய குளோசப் போட்டோகிராபி எடுப்பது பிடித்து போனது.

என்னிடம் உள்ள சிறிய ரக கேமிராவில் இதற்காக ஸ்பெஷல் மேக்ரோ லென்ஸ் எல்லாம் போடமுடியாது, கேமிராவில் உள்ள மேக்ரோ பிரிவை தேர்வு செய்து அதன் சக்திக்கேற்ப மேக்ரோ படங்கள் எடுத்துவருகிறேன்.

தினமலர்.காம் பகுதியில் பொக்கிஷம் புகைப்பட பிரிவை விடாமல் பார்த்து ரசிக்கக்கூடியவன் நான். என்னைப் போன்ற சாதாரண புகைப்பட கலைஞர்களை கூட பராட்டி அவர்களைப் பற்றி கட்டுரை வெளியாகும்போது எனக்கும் ஆர்வம் ஏற்படும். நாமும் நம்மைபற்றி சொல்லலாமா? வேண்டாமா? என யோசித்து கடைசியில் அனுப்பி விடுவோம் என்ற முடிவுடன் இந்த படங்களை அனுப்பியுள்ளேன் என்ற குறிப்புடன் சையத் அனுப்பிய படங்கள் இந்த வார பொக்கிஷம் பகுதியில் இடம் பெறுகிறது.

இவரைப் பொறுத்தவரை பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறிய ரக கேமிரா என்றாலும் அதில் தன்னால் என்ன செய்யமுடியும் என்று முயற்சித்து இருக்கிறார் பாருங்கள், அந்த முயற்சியை பாராட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

சையத்தை பாராட்ட நினைப்பவர்களுக்காக அவரது எண்: 9791031770.










Friday 7 March 2014

மகளிர் தினத்தில் ஒரு தைரிய லட்சுமி...
- எல்.முருகராஜ்

"...என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல... என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.

ஆனால் கண்ணீரைப் பெறவோ, யாருடைய கருணையையும் பெறவோ அவர் வரவுமில்லை பேசவுமில்லை.

காரணம் அவர் ஒரு சாதாரணமான பெண் அல்ல, மனதில் வீரம் மிகக்கொண்ட தைரிய லட்சுமி.

இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண்ணிற்கான விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றவர். இதற்காக அமெரிக்காவில் அதன் வெளிவிவகாரத்துறை சார்பில் வாஷிங்டன் மாகாண சபையில் நடந்த மாபெரும் விழாவில், நாட்டின் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்த மேடையில், அந்நாட்டின் முதல் பெண்மணி மிக்கேல் ஒபாமா கையால் விருது பெற்றார்.

விருது பெற்ற கையோடு அவர் பேசிய வார்த்தைகள்தான் மேலே சொன்னது. அவர் பேசிய மேலும் சில வார்த்தைகள் பலரை யோசிக்கவைத்தது. அவை என்ன வார்த்தைகள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் அவர் யார் என்பதை பார்த்துவிடலாம்.

டில்லியை சேர்ந்தவர் பள்ளிக்கு துள்ளியபடி சென்று வந்தவர் படிப்பில், விளையாட்டில் இன்ன பிற துறைகளிலும் ஆர்வமும் திறமையும் கொண்டவர் கூடுதலாக அழகும் மிக்கவர்.

ஒரு சின்ன நந்தவனம் போல இருந்தவரை, தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பார்த்து பெருமைப்பட வேண்டிய வயதைக்கொண்ட உறவினர் ஒருவர் வயதையும், தகுதியையும் மீறி லட்சுமியிடம் மோகம் கொள்ள லட்சுமி மிரட்டி, விரட்டி இருக்கிறார்.

அப்படியே போயிருக்க வேண்டிய அந்த ஆண் என்ற நாகம் உடம்பெல்லாம் பொறாமை தீ பற்றி எரிய விஷத்தை கக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.

அந்த நாளும் வந்தது அனைவருக்கும் அது வியாழன் என்றால் லட்சுமிக்கு மட்டும் மறக்கமுடியாத ஒரு கறுப்பு நாள் அது.

கல்விக்கூடம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தவரை விசாரிப்பது போல நெருங்கிவந்த அந்த உறவுக்கார மிருகம் கண்ணிமைக்கும் நேரத்தில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை லட்சுமியின் முகத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டது.

இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2005 ஆகும், அப்போது லட்சுமிக்கு வயது 16.

முகமும், உடலும் பற்றி எரிய வேதனையால் துடிதுடித்து உருண்டு புரண்ட அந்த பதினாறு வயது சின்னஞ்சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடிய போது அங்கே உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஆனால் அழகான முகத்தை காப்பாற்ற முடியாமல் போனது.

இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஒன்று ஒளிந்து மறைந்தே தனது வாழ்க்கையை நடத்துவார்கள், வெளியில் வர அவமானப்பட்டு இருட்டிலும் தனிமையிலும் ஒடுங்கிக் கிடப்பார்கள், ஒரு நடைப்பிணமாக வாழ்வார்கள் அதுவும் முடியாத போது தற்கொலை செய்து கொள்வார்கள்.

இதுதான் இந்தியாவில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் சராசரி பெண்களின் நிலமை.

ஆனால் லட்சுமி இந்த நிலையை உடைத்தெறிய முடிவெடுத்தார். தனது கோரமான முகத்துடன் எல்லா இடங்களுக்கும் போய்வந்தார். காரணம் ஆசிட் வீச்சின் கொடூரம் எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியட்டும் என்பதற்காக.

கத்தி துப்பாக்கியைவிட கொடூரமான இந்த ஆசிட்டை சாதாரணமாக யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலையை மாற்ற மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தார், அதன் அடிப்படையில் நீதிமன்றம் இது பற்றிய ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.

மேலும் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் ஏதோ தப்பு செய்தவர்கள் போல ஒளிந்து வாழும் நிலமை மாற வேண்டும் அவர்களுக்கு உரிய இழப்பீடு, அரசு வேலை, சமூக அங்கீகாரம், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் வெற்றியும் பெற்றார். முதல் கட்டமாக தன் மீது ஆசிட் வீசியவரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தந்தார்.

இப்போது 24 வயதாகும் லட்சுமி தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு அரணாக இருந்து வருகிறார், இனியும் இப்படி ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதையெல்லாம் பார்த்த பிறகுதான் இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண் என்ற விருதினை இவருக்கு வழங்கி அமெரிக்கா தன்னை கவுரவித்துக் கொண்டுள்ளது.

எனக்கு விருதை விட இது தரும் வெளிச்சம் பிடித்திருக்கிறது காரணம் எனக்கு ஏற்பட்ட வலியும், வேதனையும் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இந்த நிகழ்வு உதவும் என்பதால்.

பேசிவிட்டு இறங்கிய லட்சுமியை அனைவரும் ஓடிப்போய் கைகுலுக்கி பாராட்டினார்கள், பெண்கள் கட்டி அனைத்து முத்தமிட்டு பாராட்டினார்கள்.

அப்போது அந்த அவையிலேயே அழகான முகமாய் பிரகாசித்தது நமது தைரிய லட்சுமியின் முகம்தான்.

-நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை பகுதி