Sunday 2 June 2013


சல்யூட் மனோகருக்கு...- எல்.முருகராஜ்













சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென்று முளைத்திருந்தது ஒரு போர்டு. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த போர்டில் ஒரு புறநகர் மின்சார ரயில் ஒட்டுனர் படம் இடம் பெற்றிருந்தது.

கடைசி மூச்சு வரை கடமையே கண்ணாக கருதிய தங்கள் ஊழியருக்கு, ரயில்வே நிர்வாகம் மனம் நெகிழ்ந்து அஞ்சலியையும், ராயல் சல்யூட்டையும் செலுத்துவதாக எழுதியிருந்தது.

யார் அவர், அஞ்சலிக்கான காரணம் என்ன?

தேடலை தொடங்கினோம்.

எஸ்.மனோகர்(48).

சென்னையைச் சேர்ந்தவர், 1991ம் ஆண்டு ரயில்வேயில் சேர்ந்தவர், உண்மையும், நேர்மையும் கொண்ட கடுமையான உழைப்பாளி, புறநகருக்கான மின்சார ரயில் ஒட்டுனராக நீண்ட காலம் அப்பழுக்கின்றி பணியாற்றிவருகிறார்.

சம்பவ நாளான கடந்த 23ம்தேதி பகல் 3.40க்கு கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் ஓடும் மின்சார ரயிலை வழக்கம் போல இயக்க துவங்கினார்.

ரயில் நகரத் துவங்கியது, இவரது உடலுக்குள் என்றுமில்லாத ஒரு மாற்றம் உருவாவதை உணர்ந்தார்.
தலைசுற்றலும், மயக்கமும் துவங்கி வியர்க்கத் துவங்கியது, ஏதோ பிரச்னை என்று உணர்ந்தார், ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர்.

ரயில் கவரப்பேட்டை என்ற இடத்தை அப்போதுதான் கடந்திருந்தது. அடுத்த நிலையம் வருவதற்கு இன்னும் சில நிமிடங்ளாகும். சமாளித்து ரயிலை ஒட்டிவிடலாம் என்று ஒரு பக்கம் மனசு சொன்னாலும், அதிக எண்ணிக்கையிலான பயணிகளை வைத்துக்கொண்டு "ரிஸ்க்' எடுக்கவேண்டாம் என்ற தனது மனசாட்சியின் கூற்றுப்படி செயல்பட முடிவு செய்தார், அதே நேரம் மொத்த உடலும் தன் செயலை இழக்கத் துவங்கியது.

அந்த கடைசி வினாடியிலும் மனந்தளராது ரயிலை பத்திரமாக நிறுத்தி விட்டு, ரயில் பிரச்னையில் இருக்கிறது என்பதை எச்சரிக்கும் விதமாக முகப்பில் உள்ள "பிளாஷ் லைட்டை' எரியவிட்டவர், அப்படியே கண்கள் இருண்டு பொத்தென்று விழுந்துவிட்டார்.

இதைச் செய்ய அவர் ஒரு வினாடி தவறியிருந்தாலும் கட்டுப்பாடற்ற ரயில் எங்காவது மோதி மிகப் பெரிய விபத்தையும், கணக்கற்ற உயிர்களையும் பலி வாங்கியிருக்கும்.

ரயில் சம்பந்தமில்லாமல் ஒரு இடத்தில் நிற்பதையும், பிரச்னையில் இருப்பதை அறிவிக்கும் விளக்கு எரிவதையும், எதிரே வந்த மின்சார ரயிலின் ஒட்டுனர் பார்த்து விட்டு உடனே அனைவரையும் எச்சரிக்கை செய்தார்.

உடனடியாக பலரும் என்ஜினில் போய் பார்த்தபோது, அங்கே மனோகர் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து கிடப்பதை கண்டனர், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவசர, அவசரமாக ஆஸ்பத்திரி கொண்டு போய் சேர்த்த போதும் எல்லாம் முடிந்திருந்தது.

ஆம்... பயணிகள் அனைவரையும் பத்திரமாக காப்பாற்றிய மனோகர் பரிதாபமாக, கடுமையான மாரடைப்பின் காரணமாக இறந்து போயிருந்தார்.

அலறியடித்து ஆஸ்பத்திரிக்கு ஒடிவந்த மனைவியால் அவரது உயிரற்ற சடலத்தைதான் பார்க்க முடிந்தது, "அடப்பாவி மனுஷா... எப்போது பார்த்தாலும் வேலை, வேலைன்னு ரயில் ஒட்டுறதே கதின்னு இருப்பியே, கடைசியில ரயில்லையே உயிரைவிட்டுட்டியேய்யா''... என்று கதறி அழுதபோது சுற்றியிருந்தவர் பலரது கண்களிலும் கண்ணீர்.

இறந்த மனோகருக்கு கொஞ்சம் கடன் பிரச்னை உண்டு, அதன் காரணமாக கூடுதல் வேலை பார்த்து (ஒவர் டைம்) கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைப்பது , வட்டி கொடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டுவந்தார். அதிகமான வேலைப்பளு, உடம்பை கவனிக்காமல் விட்டது என்று எல்லாமும் சேர்ந்து அவரது உயிரை அநியாயமாக பறித்துவிட்டது.

உயிர் போகப்போகிறது என்பது தெரிந்தும், தனது உயிரைவிட தன்னை நம்பி ரயிலில் பயணிக்கும் பயணிகள் உயிர் பெரிதென கடைசி வினாடியில் செயல்பட்ட மனோகருக்கு ரயில்வே நிர்வாகம் மனதார பாராட்டி, மக்கள் பார்வையில்படும்படி அஞ்சலி செலுத்த வைத்திருந்ததே அந்த போர்டு.

வெறும் போர்டு மட்டுமே அஞ்சலியாகிவிடாது, இவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடி வேலை, கடன் சுமையை துடைத்து அவரது குடும்பத்தை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதும்தான் உண்மையான அஞ்சலியாகும்.

மேலும் மனோகரின் தியாகம், உழைப்பு, வேலையில் காட்டிய விசுவாசம், பொதுமக்கள் மீது காட்டிய அக்கறை என அனைத்திற்கும் ஊரறிய நாடறிய பெருமை சேர்க்க வேண்டும்.



No comments:

Post a Comment