Sunday 23 June 2013


எம் புள்ளை இப்ப என்ஜீனிரிங் படிக்கிறான்யா...
-எல்.முருகராஜ்



நமது தினமலர் இணையதள வாசகர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லை, நிஜமாகவே உதவி தேவைப்படும்போது, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைநீட்டி உதவுவார்கள் என்பதற்கான அடையாளம்தான் கோகுல கண்ணன்.

யார் இந்த கோகுல கண்ணன் என்பதை தெரிந்து கொள்ள கடந்த வருடம் வெளியான கட்டுரையின் சுருக்கத்தை பார்த்துவிடுவது நல்லது.

கோகுல கண்ணனின் தாயார் பெயர் கே.பிருந்தா தேவி

அன்றாடம் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வளம்வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து தாய்மார்களின் பிரதிநிதி இவர்.
தற்போது சென்னை திநகர், முத்துரங்கன் சாலை, வரதராஜன் தெரு, கதவிலக்கம் 26ல் குடியிருக்கும் இவர் படிப்பதில் ஆர்வமாக இருந்தாலும் சூழ்நிலை காரணமாக சென்னையில் உள்ள ஒரு ஒட்டல் தொழிலாளிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவர்.

குடிசை வீட்டில் அன்புக்கு குறைவில்லாமல் குடும்பம் நடத்தியவருக்கு மூன்று குழந்தைகள், தனது குழந்தைகளை நன்கு படிக்கவைக்கவேண்டும் என்பதுதான் இவரது வாழ்நாளின் லட்சியம், ஆசை எல்லாம். இதற்காக தனது கணவரின் ஊதியம் (மாதம் 3 ஆயிரம் ரூபாய்) போதாது என்பதால் நாலைந்து வீடுகளில் வேலை செய்துவரும் சம்பாத்தியம் மூலம் பிள்ளைகளை படிக்க வைக்கிறார், பெற்றவளின் சிரமம்பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.

இதில் மூத்தவன் கோகுல் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 938 மார்க்குகள் வாங்கியிருந்தான், கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்தூர் ஸ்ரீமுத்துக்குமரன் என்ஜீனியரிங் கல்லூரியே கிடைத்துவிட்டது.

ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் தே‌வை:


எல்லா சலுகையும் போக வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்ற நிலை. அவ்வளவு பணத்தை மொத்தமாக பார்த்தேயிராத பிருந்தாவிற்கு என்ன செய்வது என்பது புரியவில்லை. தான் வேலை பார்த்துவரும் வீடுகளில் கடன் கேட்டார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணிவரை இடுப்பொடிய வேலை செய்பவர், "இன்னும் இரவெல்லாம் கூட வேலை செய்கிறேன்' என் புள்ளை படிச்சா போதும் கொஞ்சம் பணம் கொடுங்க என்று கண்கலங்கிய நிலையில்தான் என் வீட்டு கதவையும் தட்டினார்
.
அந்த தாயின் கனவை நிறைவேற்ற நான் என்னால் முடிந்த தொகையை கொடுத்ததுடன் என் கடமை முடிந்ததாக நினைத்துவிடாமல், அவரது நிலமையை நிஜக்கதை பகுதியில் பிரசுரித்து வாசகர்களிடம் முடிந்த உதவியை கேட்டிருந்தோம்.
வாசகர்கள் பலரும் படித்துவிட்டு நல்ல மனதுடன் உதவினார்கள், வாசகர்கள் தங்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த அனுப்பிய பணத்தின் மதிப்பை அறிந்து கோகுலும் முதல் வருடத்தை நன்றாக படித்து முடித்துள்ளான் அவனது மதிப்பெண்களும் முதல் தரத்திலேயே உள்ளது.

இப்போது இரண்டாம் வருட படிப்பு துவங்க உள்ளது இரண்டாம் வருட படிப்பிற்கான கட்டணம் ரூபாய் ஐம்பத்து நான்காயிரத்து நானூற்று ஐம்பது ரூபாயாகும், இந்த வருடத்திற்காக நான் எனது பங்காக என்னால் முடிந்த பணத்தை கொடுத்து கணக்கை துவங்கியுள்ளேன் வாசகர்கள் தங்களால் முடிந்ததை வழங்கலாம்.மாணவன் கோகுல கண்ணனின் தாயார் கே.பிருந்தாதேவியின் வங்கி கணக்கிற்கே தங்களால் இயன்ற பணத்தை அனுப்பலாம். கே.பிருந்தாதேவி, கணக்கு எண்:1278 155 0000 94707, கரூர் வைஸ்யா பாங்க், அசோக்நகர் கிளை, சென்னை-83. வங்கியின் ஐஎப்எஸ்சி கோட் எண்: கேவிபிஎல்0001278.

பிருந்தாதேவியிடம் பேசுவதற்கான போன் எண்:9444073157. உங்களால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன் தம்பிகளையும் படிக்கவைப்பான் என்ற நம்பிக்கை வந்துள்ளது மேலும் ,ஒரு ஏழை, எளிய தாயின் கனவும் நனவாகிக்கொண்டு இருக்கிறது. நன்றி வாசகர்களே. நன்றி!

No comments:

Post a Comment