Saturday 7 December 2013

போட்டோ வாக் போவோமா...


- எல்.முருகராஜ்







புகைப்பட பிரியன்...

முகநூலில் மிகவும் பரிச்சயமான பெயர், உறுப்பினர்கள் மட்டுமே இன்றைய தேதிக்கு 7413 பேர் இருக்கின்றனர்.

உலகமெங்கும் உள்ள புகைப்பட பிரியர்களின் பிரியமான தளமாகும். தமிழ் மொழியிலே புகைப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இந்த தளம் அலசும், போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி உற்சாகப்படுத்தும், புதிய விஷயங்களை எளிமையாக அறிமுகப்படுத்தும், நீங்கள் எடுக்கும் படங்களை மதிப்பீடு செய்து மேலும் முன்னேற வழிகாட்டும், புகைப்படம் தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்ள வழிகாட்டும், 

இப்படி புகைப்படம் தொடர்பான பல விஷயங்களை பாசாங்குத்தனம் இல்லாமல் நேர்மையுடனும், இனிமையுடனும், தோழமையுடனும் பகிர்ந்து கொள்ளும், புகைப்பட பிரியனின் தளத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பிற்கு சொந்தக்காரர் மெர்வின் ஆவார்.

மெர்வினுக்கு இருபது வருடத்திற்கு முன் புகைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட காதல் இன்று வரை மெருகு குறையாமல் இருந்து வருகிறது சொல்லப் போனால் வளர்ந்து வருகிறது.

முதலில் தனது பதிவுகளை போடுவதற்காக முகநூல் பக்கம் போனவர் தனது படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் புகைப்படம் தொடர்பான பலரின் தேடல் காரணமாக புகைப்பட பிரியன் என்ற தளத்தில் களமிறங்கி கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

என்னதான் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எலக்ட்ரானிக் கருவிகளுடன் பேசிக் கொண்டிருந்தாலும், வாசித்துக் கொண்டிருந்தாலும் நேரில் பேசி கலந்துரையாடுவது போல இருக்காது என்று கருதியவர் இதற்காக கடந்த வருடம் ஒரு கருத்துப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த கருத்துப்பட்டறைக்கு நல்ல வரவேற்பு இருக்கவே இதோ இந்த வருடமும் புகைப்படம் தொடர்பான கருத்துப்பட்டறைக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

இந்த வருடம் சில சிறப்பான கூடுதல் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

வருகின்ற ஜனவரி(2014) மாதம் 25,26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்துப் பட்டறையில் முதல் நாள் போட்டோ வாக் என்ற முறையில் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள திற்பரப்பு அருவி, தொட்டிப்பாலம், பத்மநாபகோவில், முட்டம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இரண்டாவது நாள் கன்னியாகுமரியில் புகைப்படம் தொடர்பான கருத்தரங்கு நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில் பெஸ்ட் போட்டோகிராபி எடிட்டர் பழனிக்குமார், சென்னை சென்டியன்ட் பள்ளி முதல்வர் லக்ஷ்மணன், மதுரை ஸ்கூல் ஆப் போட்டோகிராபி நிறுவனர் தனபால், செந்தில்குமரன், வசந்தம் செந்தில் ஆகிய புகைப்பட நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்குகின்றனர்.

மேலும் இது தொடர்பாக நடத்தப்பட இருக்கும் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கருத்தரங்கின் முடிவில் பரிசும் வழங்கப்படுகிறது.

இரண்டு நாள் நடைபெறும் போட்டோ வாக் மற்றும் புகைப்பட கருத்தரங்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்களை மட்டுமே பங்கேற்க செய்வது சிறப்பாக இருக்கும் என்று எண்ணியுள்ளனர். ஆகவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக மெர்வினுடன் தொடர்பு கொண்டு மற்ற விவரங்களை கேட்டுக்கொண்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

மெர்வின் போன் எண்: 9443174284.

Click Here

No comments:

Post a Comment