Saturday 31 August 2013

சீர்காழியில் ஒரு சிவபக்தை...

சீர்காழியில் ஒரு சிவபக்தை...
- எல்.முருகராஜ்




சில தினங்களுக்கு முன்னால் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் கூட்டம். அந்த கூட்டத்தில் ஒரு பெண் துறவி கழுத்து கொள்ளாத அளவிற்கு ருத்ராட்ச மாலைகள் அணிந்து கொண்டு தன்னை வந்து வணங்குவோர் நெற்றியில் பட்டை, பட்டையாக திருநீறு பூசிக்கொண்டிருந்தார்.

வாய் கொள்ளாத சிரிப்புடனும், சிவாய நம உச்சரிப்புடனும், ருத்ராட்ச "மாலைகளுக்குள்' காணப்பட்ட அவர் யார் என்பதில் அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது.

என் பெயர் பாண்டிய லதா என்று ஆரம்பித்தவர்.

என் பூர்வீகம் எல்லாம் எதுக்கு, அதெல்லாம் வேண்டாம் என்றுதானே இந்தக்கோலம் பூண்டுள்ளேன் என்றவர் பழைய விஷயங்களை பற்றி குறிப்பிடும் போது, கணவர், குழந்தைகள், பெற்றோர், உற்றோர் என்று எல்லோரும் இருக்கிறார்கள், இப்போது என்னைப் பொறுத்தவரை "இருந்தார்கள்' அவ்வளவுதான்.

காதறுந்த ஊசியைக்கூட இந்த உலகத்தைவிட்டு போகும்போது எடுத்துக்கொண்டு போகமுடியாது என்ற பொருளில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட " காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே ' என்ற ஒரே ஒரு வார்த்தைதானே பெரும்பணக்காரராக வாழ்ந்த பட்டினத்தாரை, வெறும் கோவணம் மட்டுமே கட்டிய துறவியாக்கியது.

அப்படி ஒரு சம்பவம்தான் என்னையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது, எல்லாம் அருணகிரிநாதரின் அருள்.

நான் தற்போது திருவண்ணாமலையில் அடியார் ஒருவர் கொடுத்த அறையில் தங்கியிருக்கிறேன். என் சொத்து என்பது இந்த ருத்ராட்சத மாலைகளும் சில உடைகளும் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களும்தான். என்னிடம் பொருள் இருந்தபோது இல்லாத அருள் பொருளில்லாதபோது நிறைய இருக்கிறது. வீடு, வாசல், நிலம், நகை, வாகனம், வசதிகள் என்று ஓடும் மனிதர்களைப் பார்த்தால் இப்போது எனக்கு பாவமாக இருக்கிறது. 

எதுவுமேயில்லாமல் சும்மாயிருப்பது என்பது எவ்வளவு சுகமானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
என்னைப்போல அனுபவித்தவர்களுக்கே அது புரியும். அரசனுக்குதான் ஆயிரம் கவலை என்னைப் போல ஆண்டிக்கு ஏது அந்த நிலை என்று பேசிக்கொண்டே இருக்கிறார், பேச்சுக்கு பேச்சு என்னங்கய்யா நான் சொல்றது என்று கேட்டு சிரிக்கிறார்.

நிறைய சிவன் பாட்டு கேட்கலாம் என்று என்மீது அன்பு கொண்ட ஓருவர் சிவன் பாடல்களை நிரப்பி ஒரு மொபைல் போனை கொடுத்தார். இதில் பேசவும் முடியும் என்றாலும், நான் யாரிடமும் பேசப் போகிறேன் என்னிடம் யார் பேசப் போகிறார்கள். இந்த மொபைல் வாங்கிய பிறகு இதன் எண் என்ன? என்று கேட்டு பேசியவர் நீங்கள்தான். (நீங்களும் கூட பேசலாம் எண்: 9894839579)

திருவண்ணாமலையில் இருந்தால் நாள்தவறாமல் அண்ணாமலையார் கோயிலுக்கு போய் அங்குள்ள முருகன் சன்னதியருகே சிவமே தவம், தவமே சிவம் என்ற நிலையை மனதில் நிறுத்தி தியானத்தில் அமர்ந்திருப்பேன், இரவில் பள்ளியறை பூஜையின் போது சிவனை தரிசிப்பேன்.

உணவு உடைக்காக பெரிய தேடுதல் கிடையாது கோவிலுக்கு வரும் பக்தர்களே கொண்டுவந்து கொடுத்து விடுகிறார்கள், என் செலவிற்கு வேண்டிய பணத்தையும் அண்ணாமலையார் யார் மூலமாவது கொடுத்து விடுகிறார்.

நினைத்தபோதெல்லாம் கிரிவலம் வருவேன், ஏழு முறை காசிக்கு போய்விட்டு வந்துவிட்டேன் ஒரு முறை அமர்நாத்தும் போய்விட்டுவந்துவிட்டேன், வெள்ளியங்கிரி, சதுரகிரி மலை, கொல்லி மலையெல்லாம் நினைத்தபோதெல்லாம் போய்விட்டு வருவேன். அதிலும் சதுரகிரி மலையில் பதஞ்சலி சித்தரின் தரிசனம் கிடைத்தது என் பாக்கியம்.

இவ்வளவு ருத்ராட்ச மாலைகள் போடவேண்டும் என்பது என் விருப்பம் அல்ல எப்படியோ அது நிகழ்ந்து விட்டது. இப்போது அது நிலைத்துவிட்டது. தூங்கும்போது குளிக்கும் போதும் தவிர மற்றபடி எப்போதும் இந்த மாலைகள் என் கழுத்தில்தான் இருக்கும் இதனால் எனக்கு எதுவும் பிரச்னை இல்லை பஸ், ரயிலில் பயணம் செய்யும் போது மட்டும் நடத்துனர் மற்றும் சில பயணிகள் வித்தியாசமாக பார்ப்பார்கள். யார் பார்க்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் நினைத்து அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும் நிலயை நான் கடந்துவிட்டேன், எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.

நாட்டில் உள்ள அனைத்து சிவ தலத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன், பாதி வரை பார்த்தும் விட்டேன் மீதியை பார்க்கவும் நினைத்துள்ளேன், நான் நினைத்து என்ன செய்ய அந்த சிவன் நினைக்கவேண்டும். என் நினைப்பை நிறைவேற்றி வைக்கவேண்டும்.

தியானம், மவுனம், போன்றவைகள் எல்லாம் இன்னும் எனக்கு நான் நினைத்தபடி கைகூடவில்லை, மரணமாவது நான் நினைத்தபடி கூடிவர வேண்டும்.

தன் உடம்பின் பாதியை கரையான் அரித்தது கூட தெரியாமல் தியானத்தில் இருந்த ரமணர் நடனமாடிய புண்ணிய திருவண்ணாமலையில் அவரைப்போல இல்லாவிட்டாலும் அவருக்கு ஒரு துளி நெருக்கமாகவேனும் எனக்கு தியானம் கைகூடவேண்டும், அந்த தியானத்தின் போதே காம்பில் இருந்து பூ உதிர்வது போல என் உயிர் போய்விட வேண்டும். இது என் வேண்டுகோள் மட்டுமல்ல வேண்டுதலும்கூட.


Monday 26 August 2013

ஜிகினா போராளிகள் - திருந்துவரா நம் மக்கள்? உரத்த சிந்தனை, எல்.முருகராஜ்

ஜிகினா போராளிகள் - திருந்துவரா நம் மக்கள்? உரத்த சிந்தனை, எல்.முருகராஜ்



ஒரு வழியாக, "தலைவா' படம் தியேட்டருக்கும் வந்துவிட்டது.

 இனிமேல் கடலில் கலந்து வீணாய் போன, 6 டி.எம்.சி., தண்ணீர் திரும்ப கிடைத்து விடும், எல்லை மீறி வந்து பாக்., படையினர் தொல்லை கொடுக்க மாட்டார்கள், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் நல்ல தீர்ப்பு கிடைத்து விடும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்...

அடப்போங்கய்யா...

 ஏற்கனவே, பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் பார்த்தாகி விட்ட படத்திற்கு, தமிழகத்தில் கிடைக்கப் போவது லாபப் பணமே.

 அதிலும், ஏதாவது வரிவிலக்கு கிடைக்குமா என்று பார்த்தனர்... அதற்கு வழியில்லை, அந்த வகையில், 3 கோடி ரூபாய் நஷ்டம் வரும். அதை யார் ஏற்பது என்பதில் தான், "நெஞ்சுவலியே!'

 மற்றபடி, உண்ணாவிரத போராட்டமெல்லாம் ஒரு உதார் தான். எங்கே அனுமதி கொடுத்துவிடுவரே என்று பயந்து கொண்டே தான், மனுவே கொடுத்தனராம்; நல்லவேளையாக அனுமதி கிடைக்கவில்லை. இல்லையென்றால், அமலாபால், சந்தானம் இவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரதத்தின் புனிதத்தையே கெடுத்து காமெடியாக்கி இருப்பர்; தப்பித்தது தமிழகம்.

 அரசியல் காரணங்களால் படத்திற்கு தடை என்பதும் தமாஷே! "நீயா தலைவனா வரலை; மக்கள் தான் உன்னை தலைவனா வரச்சொல்றாங்க'ன்னு, மகேந்திரன் பேசும் வசனத்தை வேண்டுமானால் அரசியலில் சேர்த்துக் கொள்ளலாம். "படத்தில் ஒரு துளி அரசியல் இல்லை' என்று, அப்பாவும், பிள்ளையும் காலையிலும், மதியத்திலும், இரவிலும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு கொண்டிருந்தனர். 

அட அட்டைகத்தி வீரர்களா... படத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்று யார் சொன்னது? அரசியலே சினிமாவாக வந்த, "முகமது பின் துக்ளக்' போன்ற படங்கள் வந்த ஊர்தானே இது. உங்க படத்தில் அரசியல் இல்லை தான்... அப்படியே இருந்தால், "ஆமாம் நாட்டிற்கு தேவையான அரசியல் இருக்கிறது' என்று துணிந்து சொல்ல வேண்டியது தானே. அதைவிட்டு, "அரசியல் சுத்தமா இல்லீங்க' என்று சொல்ல, கொடநாடு வரை போய் அசிங்கப்பட்டு திரும்புவது எல்லாம் தேவைதானா? இப்ப என்னாச்சு நீங்க துப்பாக்கியில் பேசின, "அந்த பயம் இருக்கணும்' என்ற வசனம், இப்ப உங்களுக்கு தானே ரொம்பவே பொருந்துகிறது.

ஒரு படத்தைப் பார்த்து எடுத்தால் தானே, "திருட்டு' என்பர். பல படத்தை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாய் திருடினால், திரட்டு என்பார்களோ? என்னவோ தெரியவில்லை... "நாயகனில்' ஆரம்பித்து, "தேவர் மகன்' வரையிலான படங்களில் இருந்து சுட்டதை வைத்து உருவாக்கின கதை தான், "தலைவா' என்ற பெயரில் கந்தலாகியுள்ளது.

 உங்க பிரச்னைக்கு நடுவில, கோவை ரசிகன் ஒருத்தன் உங்க படத்தை தியேட்டர்ல பார்க்க முடியலங்கற கவலையில, தூக்கு போட்டு செத்தே போனான். படம் பார்த்து இருந்தாலும், இதே முடிவு தான் எடுத்திருப்பான்ங்றது ஒரு தரப்பினர் வாதம். அது வேறு விஷயம்... ஆனா, செத்துப் போன ரசிகனுக்கு ஓடிப்போய் அனுதாபம் தெரிவித்து, இழப்பீடு கொடுத்து அவனது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை... ஆனால், ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத அளவிற்கு நீங்க பட்ட கவலை அவ்வளவு சரியாகப்படலை. இந்த அட்டை கத்தி ஹீரோக்களை, எப்போது தான் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்போகின்றனரோ!

முதல்ல, சினிமா பார்க்கப் போனால், பார்த்த சினிமாவை தியேட்டரோடு விட்டுவிட்டு வரவேண்டும். அதை வீட்டுக்குள் கொண்டு வருவதால் தான் இத்தனை வினையும். அவர்கள் கொண்டு வராவிட்டாலும், இப்போதும் வீட்டின் வரவேற்பறைக்கு, "டிவி'களும், மொபைல், ஐபேட் போன்ற மின்னணு பொருட்களும், உங்கள் பைக்குள் கொண்டு வந்து, விஷத்தை துப்பும் காலமாக இருக்கிறது

. ரஜினி, ஒரு காலத்திலும் நிஜத்தில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில் பிடித்தது இல்லை. ஆனால், அவரது ரசிகர்கள் தான், அந்த வேலையை செய்து, உதட்டை இன்னமும் புண்ணாக்கி கொண்டு இருக்கின்றனர். 80களில் நன்றாக இருந்த இளைஞர்களில் பலரை, சிகரெட் பிடிக்கவும், குடிக்கவும் வைத்த பெருமை, ரஜினியையே சேரும். அதற்கு பிராயச்சித்தமாக அவர், ராகவேந்திரராக மாறினாலும், அவரது ரசிகர்களுக்கு அவரை பரட்டையாகத் தான் பிடித்துப் போய் விட்டது.

 கமல், "நான் வீட்டை விற்கப் போகிறேன்... நாட்டை விட்டு போகிறேன்' என்றவுடன், கவுதமியை விட, அதிகம் உணர்ச்சிவசப்பட்டவன் நமது ரசிகன் தான். ஏதோ அந்த வீட்டை வாங்கும் போது, இதே போல மீடியாவில் தோன்றி, "நான் இந்த படத்தில் நடித்ததன் மூலம் வாங்கிய வீடு' என்று, இவர்களிடம் சொல்லிவிட்டு வாங்கிய வீட்டை, இப்போது விற்கப் போவது போல, வீட்டிற்குள் கமலும், வெளியில் ரசிகர்களும் வைத்த ஒப்பாரி அதிகம் தான். இந்த ஒப்பாரியை, மும்பை வரை கொண்டு போய் வைத்தது, இன்னமும் அசிங்கம்.

மதுரையில் நடந்த, "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவிற்காக, ரயிலேறி வந்திருக்கலாம்... பெரிய ஆளுகங்றதுனாலே விமானம் ஏறி வந்துருக்கலாம் தப்பில்லை. ஆனால், ஹெலிகாப்டரில் கதாநாயகியுடன் வந்துவிட்டு, "100 கோடி போட்டு இருக்கேன்' என்று மீடியாவிடம் கதறினால் என்ன அர்த்தம். படத்திற்கு, 10 கோடியும்; புதுக்கதாநாயகியுடன் ஹெலிகாப்டரில் சுத்தியதற்கு, 90 கோடியும் செலவானால், அப்புறம் வீட்டை விற்கத்தான் வேண்டியிருக்கும்.

 இதில் என்ன வேடிக்கை என்றால், "யாரால்' பிரச்னை என்று, 10, 15 நாள் புலம்பினார்களோ, அவர்களுக்குதான் முதல் நன்றியை, பிரச்னை தீர்ந்ததும், கமலும், விஜயும் முந்திக் கொண்டு கூறினர். காரணம், மறுபடியும் பிரச்னையாகி விடக் கூடாதல்லவா?

கப்பலோட்டிய தமிழனையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும், சினிமா மூலமாகத் தான், தமிழன் ஒரு காலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டான். அது சாதனை என்றால், அதே தமிழன், "கண்டபடி கட்டிப் பிடிக்கவும்' அதே தமிழ் சினிமாவை துணையாக்கிக் கொண்டது தான் வேதனை. ஆகவே, கோபம் சினிமா மீதல்ல... அதை சரியாக பயன்படுத்தாமல் வீணாக சீன் போடும் அட்டை கத்தி வீரர்கள் மீது தான்

! எல்லாரும், எம்.ஜி.ஆராக ஆசைப்படுகின்றனர்... அது தப்பில்லை! ஆனால், "ஒளிவிளக்கு' படத்தில், ஒரு காட்சியில் குடிகாரனாக, மது பாட்டிலுடன் நடித்துவிட்டு, அதற்காக பல காலம் வருந்தியவர் அவர். விற்பனைக்கான கற்பனை உலகமே அது என்றாலும், அதிலும் கற்பை கடைபிடித்தவர் அவர்... "நம்மைப் பார்த்து ரசிகர்கள், கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது' என்பதில் கவனமாக இருந்தவர் அவர். ஆகவே, அவர் நிஜ ஹீரோவாக மக்கள் மன்றத்திலும் ஆட்சி செய்தார்.

ஆனால், நிஜத்தில் எந்நேரமும், "சிவந்த கண்களுடன்' நாக்கை துருத்தி, கையை ஓங்குவதும், திட்டுவதும், அடிக்க பாய்வதுமான செயல்பாடுகளை செய்துவிட்டு, "நான் கறுப்பு எம்.ஜி.ஆர்.,' என்று சொல்லிக் கொள்வது, அவ்வளவு பொருத்தமாக படவில்லை. பக்கம் பக்கமாய் ஊழலுக்கு எதிராக, நீங்கள் பேசிய வசனங்களையும், கொடுத்த புள்ளி விவரங்களையும், எல்லையில் தொல்லை கொடுக்கும் எதிரி படையினரை பந்தாடிய வேகத்தையும், ஏழைகளுக்கான திட்டங்களை தந்த விவேகத்தையும் கண்டு வாய்பிளந்ததன் காரணமாகத் தான், வாழ்நாளெல்லாம், "மைக்' முன் ஆவேசமாக பேசும் வைகோவிடம் கூட கொடுக்காத எதிர்க்கட்சி தலைவர் பதவி அந்தஸ்தை, உங்களிடம் மக்கள் தூக்கி கொடுத்தனர். ஆனால், சினிமாவில் பேசிய வசனத்தையும், வீரத்தையும் இந்த இரண்டு ஆண்டுகளில், சட்டசபையில் ஒரு துளிகூட காட்டவில்லையே ஏன்? சரி, அங்கு தான் கேமரா, ஸ்டார்ட், ஆக்ஷன் சொல்ல வழியில்லை என்று வைத்துக் கொள்வோம். உங்கள் முழக்கங்களை தெரு முனைகளில் மக்கள் முன் வைத்திருக்கலாமே!

எதிர்க்கட்சி தலைவராக இருந்து, பேசவா பிரச்னையில்லை... தூத்துக்குடி மணல் கடத்தல் பிரச்னை ஒன்று போதாதா நீங்கள் உறுமுவதற்கு... உறும வேண்டாம்... திறந்து விடப்பட்ட தண்ணீர், கடை மடை விவசாயிகளுக்கு போகாத வேதனைக்கு ஆதரவாக, தூர் வாராத ஏரி, கிணறுகளுக்கு எதிராக, நித்தமும் பிடிபடும் தமிழக மீனவர்களின் குரலாக, மைக் பிடித்து செருமவாவது செய்திருக்கலாம்.

 இப்படி, விஜய் முதல், விஜயகாந்த் வரையிலான அட்டை கத்தி வீரர்களை, இந்த உலகம் இன்னமும் நம்பிக் கொண்டிருந்தால், நாடு எப்படி உருப்படும்?

இ-மெயில்: murugaraj2006@gmail.com

கேதார் நாத்தும் அசோக் கேடியாவும்...

கேதார் நாத்தும் அசோக் கேடியாவும்...
- எல்.முருகராஜ்











சென்னையில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் நிர்வாக அறங்காவலராக இருப்பவர் அசோக் கேடியா.
இவருக்கு சிறு வயது முதலே புகைப்படம் எடுப்பது என்பது விருப்பமான பொழுதுபோக்கு

சென்னையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியை, புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் பொன்னுசாமியுடன் சேர்ந்து கடந்த 2002ம் ஆண்டு துவக்கியவர். இந்த அமைப்பு இந்தியா இன்டர்நேஷனல் போட்டோகிராபிக் கவுன்சில், பெடரேஷன் ஆப் போட்டோகிராபி, போட்டோகிராபி சொசைட்டி ஆப் அமெரிக்கா ஆகிய புகைப்பட கழகங்களுடன் இணைந்து செயல்படும் சிறப்பைக்கொண்டதாகும்.
அமைப்பின் நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது பல ஊர்களுக்கும் சென்று படமெடுக்கும் இவர் கடந்த மே மாதம் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்தார்.

இந்தியாவின் ஆன்மிகம் குடிகொண்டிருக்கும் இந்த மலைகளின் அழகை, அற்புதத்தை, இயற்கையை, பசுமையை, வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற உயிரோவியத்தை, வெயிலின் ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு முகம் காட்டும் சிகரங்களை, கண்ணாடி போல தெளிந்து ஒடும் ஆறுகளின் அழகை தனது கேமிரா கண்களால் அள்ளினார்.
இத்தனை நாள் இத்தகைய அழகை பார்க்காமல் இருந்துவிட்டோமே, இனிமேல் அடிக்கடி இங்கு வரவேண்டும் என்று தான் எடுத்த படங்களை எல்லாம் நண்பர்களுக்கு போட்டுக் காண்பித்து அடுத்த கேதார்நாத் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

இவர் கேதார்நாத் போய்வந்து சரியாக ஒரு மாதம் கூட ஆகாத சூழலில்தான் அந்த துயரம் நடந்தது. உத்தர்கண்ட் மாநிலத்தின் பேரழிவாக கருதப்படும் அபாய வெள்ளம் ஏற்பட்டது. கண்ணில் பட்டவைகளையும், கரையில் இருந்தவைகளையும் சூறையாடிய வெள்ளம் கேதார்நாத்தின் பெரும்பகுதியை விழுங்கிவிட்டது.
இவர் போய்வந்த பகுதிகள் எல்லாம் மண்மேடிட்டதை பார்த்து முதல் இவருக்குள் ஏற்பட்ட சோகமும், வருத்தமும் இன்னமும் குறையவில்லை.

சமீபத்தில் நடந்த உலக புகைப்பட தினவிழாவின் போது இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் தான் எடுத்த கேதார்நாத்தின் உயிரோட்டமுள்ள படங்களை கண்காட்சியாக வைத்திருந்தார். படங்களின் அழகை பார்க்க, பார்க்க எப்படி இருந்த கேதார்நாத் என்று பார்த்தவர்கள் மனதிலும் வலி.
இவரிடம் கேதார்நாத் புகைப்பட அனுபவங்கள் பற்றி பேசவும், மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி பற்றி தெரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9841026580.

இவரது கேதார்நாத் படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

இரக்கமுள்ள மனசுக்காரன்டா...


இரக்கமுள்ள மனசுக்காரன்டா.
- எல்.முருகராஜ்



பட்டப்படிப்பு படித்துவிட்டு பல்வேறு வேலைகளை பார்த்த ஒருவர் தற்போது மதுரை மக்களின் அன்பைப் பெற்ற ஆட்டோ ஒட்டுனராக உள்ளார்.
அவர் பெயர் டி.மதன்

மதுரை வக்பு கல்லூரியில் வரலாறு பட்டப்படிப்பு எடுத்து படிக்கும் போது இதை படித்தால் வேலை கிடைக்காது என்று நண்பர்கள் சிலர் சொல்ல,"நான் வேலைக்காக படிக்கவில்லை என் அறிவை விருத்தி செய்து கொள்ளவே படிக்கிறேன், மேலும் வரலாறு என்பது எனக்கு பிடித்த விஷயம், நாட்டோட வரலாறும் நகரத்தோட வரலாறும் தெரியாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் நானே வரலாறு படிக்காவிட்டால் எப்படி'' என்று சொல்லிவிட்டு வரலாறு படித்தவர். தொடர்ந்து வரலாற்று பாடத்தில் முதுகலை படிக்கலாம் என்று எண்ணியபோது வேலை பார்க்கவேண்டிய குடும்ப சூழ்நிலை.

சென்னையிலும், திருப்பூரிலும் பல்வேறு வேலை பார்த்தார் எதுவுமே அவருக்கு மனது பிடிக்கவில்லை சொந்த ஊரான மதுரைக்கே திரும்பினார். பொழுது போக்காக "கிளாரினட் 'எனும் இசைக் கருவியை வாசிக்கப் பழகியிருந்ததால் உள்ளூர் பேண்டு வாத்திய குழுவில் கிளாரினட் இசைக் கலைஞராக கொஞ்ச நாள் இருந்தார்.அதில் பணம் வரவில்லை ஆனால் புகழ் கிடைத்தது.


இதிலும் நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் இவரது சகோதரர் "கொஞ்ச நாளைக்கு ஆட்டோ ஒட்டிப்பாருப்பா உனக்கு பிடிக்கும்' என்று சொல்லி வழிகாட்ட மதன் ஆட்டோ ஒட்ட துவங்கினார்.


எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, நேர்மை, உழைப்பை வெளிப்படுத்தும் மதன் ஆட்டோ ஒட்டுவதிலும் தனது நல்ல குணங்களை வெளிப்படுத்தினார், படித்த பட்டப்படிப்பும் இவரது அணுகுமுறையில் பண்பாட்டினை வெளிப்படுத்தியது. இவர் கிளாரினட் வாசித்ததன் மூலம் கிடைத்த புகழும் எளிதில் மக்களை அணுகவைத்தது.

நியாயமான கட்டணம், ஒரு எஸ்எம்எஸ் கொடுத்தால் போதும் உடனே தொடர்பு கொள்வது எந்நேரம் அழைத்தாலும் செல்வது என்பது போன்ற காரணங்களால் மதுரை திருப்பாலை பகுதி மக்களின் அன்பிற்கு பாத்திரமானார், அந்த பகுதி பெண்களுக்கு கூடப்பிறக்காத அண்ணன் போல அக்கறை எடுத்து செயல்படுவார். இதன் காரணமாக எங்கே போகவேண்டும் என்றாலும் கூப்பிடு மதனை என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகிவிட்டார்.


இது மட்டுமின்றி தனது ஆட்டோ சவாரி இல்லாமல் போகும் போது வழியில் யாராவது முதியவர்களை பார்த்தால் இலவசமாக ஏற்றிச் சென்று விட்டுவிடுவார், பிரசவத்திற்கு இலவசம், ஆள் இல்லாத பெரியவர்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் திரும்ப கூட்டிக்கொண்டு வருவது, நள்ளிரவு நேரமானாலும் ரயில் பெட்டிக்கே வந்து வாடிக்கையாளர்களை வரவேற்று வீட்டில் கொண்டு போய்விடுவது, அதே போல ஏற்றிவிடுவது என்று தனது ஆட்டோ பணியை பாசத்துடனும், நேசத்துடனும் செய்வதன் காரணமாக, வருடத்தில் 365 நாளும் ஒய்வு ஒழிவின்றி, நேரம் காலம் பார்க்காமல் இரக்கமுள்ள மனசுக்காரனாக ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.

ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து எட்டு வருடமாகிறது.வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டியவர் இன்னும் கொஞ்ச நாளில் சொந்த ஆட்டோ ஒட்டுனராகப்போகிறார்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை போன் மூலம் அழைத்தால் அழைத்தவர்கள் தேவைக்கு ஏற்ப ஆட்டோ ஏற்பாடு செய்துவிடுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டோ வேண்டும் என்றாலும் அமைத்து தருகிறார்.

கல்லூரியில் வரலாறு படித்தவர் என்பதால் மதுரையின் வரலாறை முழுமையாக தெரிந்து வைத்திருப்பதால் தெரியாதவர்கள் ஆட்டோவில் ஏறும்போது மதுரையின் வரலாறை சுவராசியமாக சொல்கிறார். விரும்புபவர்களுக்கு சம்பந்தபட்ட இடத்தை கூட்டிப்போய் காண்பிக்கிறார்.


வரலாறு முதுகலை படிக்கவேண்டும் என்ற ஆசையை தற்போது தபால் மூலம் படித்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.

என் தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது எனக்கு அது போதும் வேறு எந்த வேலைக்கு போயிருந்தாலும் இந்த அளவு நிம்மதியும், உறவும், நட்பும், பாசமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்று சொல்லும் ஆட்டோ மதன் உண்மையின் அனைவரின் அன்பை பெற்ற மதன்.


செய்யும் தொழில் எதுவானாலும் அதில் திறமைதான் நமது செல்வம் என்ற பொன்மொழியின் இலக்கணமாக திகழும் மதனுடன் பேச விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9367792728.

Saturday 17 August 2013

தங்கவேலு என்ற காந்தி பக்தர்...


தங்கவேலு என்ற காந்தி பக்தர்...
- எல்.முருகராஜ்






விடிந்தும் விடியாத காலைப்பொழுது

கதரில் சட்டை, கால்சட்டை அணிந்த பெரியவர் ஒருவர் பளீர் தோற்றத்துடன் நடந்து செல்கிறார்


அவர் கால்கள் சென்று நின்ற இடம் கோவை சரவணம்பட்டியில் உள்ள கோயிலாகும், கால்கள் நின்றவுடன் அவரது கைகள் செயல்பட துவங்குகிறது, கோயிலின் வாசல் மற்றும் சுற்றுப்புறத்தை கூட்டி தண்ணீர் தெளித்து சுத்தம் செய்கிறார்.

பின்னர் பூஜைக்குரிய தேங்காய், பழம், சந்தனம், விபூதி, ஊதுபத்தி போன்ற பொருட்களுடன் கோயிலை திறக்கிறார். உள்ளே இன்னொரு ஆச்சர்யம், எந்த கடவுள் படமும் இல்லை மாறாக மகாத்மா காந்தி உருவச்சிலைதான் இருக்கிறது.

அவரைப்பொறுத்தவரை காந்திதான் கடவுள், காந்திக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றி, வந்தே மாதரம் பாடல்கள் பாடி, மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷத்தை மந்திரம் போல சத்தம் போட்டு சொன்னபடி கற்பூர ஆரத்தி காட்டுவதற்கும், வெளியே பொதுமக்கள் வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது.

அவர்களுக்கு ஆரத்திகாட்டுகிறார், விசேஷ தினம் என்றால் இனிப்பு உண்டு .அன்று சுதந்திர தினம் கேட்கவேண்டுமா? ஜிலேபி, கடலை உருண்டை, சாக்லெட் என்று பல்வேறு விதமான இனிப்புகள் வழங்கப்பட்டது, கூடுதலாக அன்று கோயில் முன் கூடிய மாணவ, மாணவியர் உள்பட அனைவருக்கும் காந்தியின் சத்திய சோதனை புத்தகமும், தேசிய கொடியும் வழங்கப்பட்டது.

இது முடிந்ததும் மனிதர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் ஆயிரக்கணக்கான தேசிய கொடியையும், காந்தி படத்தையும், சத்திய சோதனை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார், அவரது இருசக்கர வாகனத்தின் பின்னால் சிறிய தேர் போல செய்து அதனுள் காந்தி சிலையை வைத்திருந்தார். அவரது வாகனம் முதலில் போய் நின்ற இடம் கோவையின் பரபரப்பான காந்தி மார்கெட் பகுதியாகும்.

அங்கு போய் மக்கள் பார்க்கும்படியாக நின்று கொண்டு, " நமது நாட்டின் சுதந்திர தினத்தை மகிழ்வோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம், இந்த மகிழ்ச்சிக்கு காரணம் நமது சுதந்திரம்தான், இந்த சுதந்திரத்தை பல்வேறு தேசதலைவர்கள் நமக்காக அரும்பாடுபட்டு வாங்கி தந்துள்ளனர், அவர்களில் முதன்மையானவர் மகாத்மா காந்தியாவார். நாட்டையும் அவரையும் நேசியுங்கள் அவரது சத்திய சோதனையை வாசியுங்கள் என்று சொல்லி தேசிய கொடியையும், காந்தி படத்தையும், சத்திய சோதனை புத்தகத்தையும் வழங்கிவிட்டு அடுத்த இடத்தை நோக்கி செல்கிறார்.

இவர் பெயர் தங்கவேலு, 67 வயதாகும் இவர் கொங்கு மண்ணிலே சுதந்திர கிடைத்த ஆண்டில் பிறந்தவராவார். சுதந்திரம் வாங்குவதற்கு பட்ட கஷ்டங்களை கோவை கணபதி பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தில் உட்கார்ந்து பெரியவர்கள் பேசுவதை சிறுவனாக இருந்த போது கேட்ட தங்கவேலுவிற்கு காந்தி மீது அளவுகடந்த பாசமும், பக்தியும் ஏற்பட்டது.

அவரது கொள்கை கோட்பாட்டின்படி எளிமையும், நேர்மையும் துணை கொண்டு வாழ்ந்தார், திருமணமான பிறகு மும்பை சென்றவர் அங்கு கடுமையாக உழைத்து உயர்ந்தார். வரும் வருமானத்தில் பெரும்பகுதியை சமூக சேவையில் செலவழித்தார். பணத்தை செலவழித்ததை விட பார்வையற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் பக்க பலமாக இருந்து நாள் தவறாமல் செய்த சேவையால் மன நிறைவு கொண்டார். இவரின் அன்பு பாசம் காரணமாக முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாயின் நண்பராகவும் மாறிப்போனார்.

பின்னர் சிவசேனாவின் பால்தாக்கரேக்கு இவரது வளர்ச்சி பிடிக்காமல் போக தமிழன் என்று அடைமொழி கொடுத்து பிரித்தாளும் அரசியலில் இறங்கினார். இந்தியர் யாவரும் ஒரு தாய் மக்கள் அனைவரும் சகோதரர், சகோதரிகள் என்று படித்து அதன்படி வாழும் தங்கவேலுவிற்கு இந்த அரசியல் பிடிக்காமல் போனதால் மும்பையை விட்டு கிளம்பி மீண்டும் கோவை வந்தடைந்தார்.

கோவை வந்தவர் தீவிரமாக காந்திய பிரச்சாரத்தில் இறங்கினார், காந்திக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்று முடிவு செய்து தனது சொத்தைவிற்று கோயில் கட்டியுள்ளார். கட்டிய கோயிலில் தினமும் வழிபாடு உண்டு. பிற்சேர்க்கையாக இவரை ஈர்த்த திருவள்ளுவர் மற்றும் காமராஜரும் தற்போது தெய்வமாக கோயிலுனுள் காந்தி அருகே இருக்கின்றனர்.


உற்றமும், சுற்றமும், நட்பும் இவரை ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக பார்த்து பேசினாலும் இப்போது இப்படி ஒரு அபூர்வ மனிதர் நம்மிடையே இருக்கிறாரே என்று நிறைய மரியாதையுடன் பார்க்கிறார்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளி கல்லூரி மற்றும் பொது இடங்களுக்கு பிரச்சாரம் செய்யப் போய்விடுவார். தனது சமூக சேவைக்கு எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பது இல்லை. ஒரு பொன்னாடை போர்த்துகிறோம் என்று கூப்பிட்டால் கூட தயவு செய்து வேண்டாம் என்று தவிர்த்துவிடுகிறார். யாரிடமும் ஒரு பைசா வாங்கியது கிடையாது, வாழ்வாதாரத்திற்கு ஒரு பல்பொருள் கடை வைத்துள்ளார். தன்னால் என்ன முடியுமோ அதைச் செய்து கொண்டு இருக்கிறார். நேர்மையும், எளிமையும், உண்மையும் கொண்ட காந்தியவாதியாகவே திகழ்கிறார்.

கொங்கு மண்ணிற்கே உரிய பிரியமான, பாசமான, மரியாதையான கொங்கு தமிழில், காந்தி கோயில் வாசலில் வைத்து இப்படி கேட்டார், "ஏனுங்க மத்தவங்க பார்வையிலே நான் எப்படியோ இருந்துட்டு போறேன், நீங்க சொல்லுங்க, என்னைய பத்தி என்ன நினைக்கிறீங்க?'' என்றார்.

காந்தியும், காமராஜரும், திருவள்ளுவரும் கோயிலுள் சிலையாக பேசாமல் நின்று கொண்டு இருக்கின்றனர், கோயிலுக்கு வெளியே நீங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள் அது மட்டுமே வித்தியாசம் என்றேன் நான்.

குறிப்பு: காந்தி பக்தர் தங்கவேலுவை எனக்கு அறிமுகம் செசய்திட்ட கோவை ஈரநெஞ்சம் அமைப்பின் நிர்வாகி மகேந்திரனுக்கு நன்றி! காந்தி பக்தர் ஐயா தங்கவேலுவை தொடர்பு கொள்ள : 9042596956.

Saturday 10 August 2013

மரம் அல்ல காட்டையே வளர்த்த ஓரு மாமனிதர்...

மரம் அல்ல காட்டையே வளர்த்த ஓரு மாமனிதர்...
- எல்.முருகராஜ்


அது 2008-ம் வருடமாகும்.

நகர்ப்புறத்திற்குள் நுழைந்துவிட்ட யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டி விடுவதற்காக அதனை துரத்திக் கொண்டே சென்ற வனத்துறையினருக்கு யானைகள் நுழைந்திட்ட ஒரு காட்டைப் பார்த்ததும் திகைத்துப் போய்விட்டனர்.

மனித சஞ்சசாரமே படாமல் அடர்ந்து பசுமை பொங்க காணப்பட்ட அந்த காடு அரசு பதிவேட்டிலேயே இடம் பெறாத காடாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட்டனர்.

எப்படி உருவானது இந்தக்காடு, எத்தனை பேர் உருவாக்கினர் இந்த காட்டை என விசாரித்தபோது இன்னும் அதிசயித்து போனார்கள், காரணம் "முலாய் காடு' என்று அழைக்கப்பட்ட அந்த காட்டை, கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக உருவாக்கி இருக்கிறார் என்பதால்.

யார் அவர்,

அவர்தான் ஜாதவ் பயேங்
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி . அங்குள்ள மக்கள் இவரை "முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979ம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் போன்ற ஊர்வன அடித்து வர பட்டது. வெள்ளம் வடிந்த பின் அவை வெப்பம் தாங்காமல் மணல்பரப்பிலேயே இறந்து கிடந்தன். ஒரு மர நிழல் இருந்திருந்தால் கூட பல உயிர் பிழைத்திருக்கும் என வனத்துறையினர் சொன்னதை கேட்ட போது ஜாதவ்விற்கு வயது 16. அப்போது மரம் வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.

1980ம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் "சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, அந்த திட்டத்தில் தன்னை ஆர்வமுடன் இணைத்துக் கொண்டார். திட்டப்பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட, இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை.

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார் ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து "சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளரவில்லை. இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார் வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார் இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் இதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

இப்படி 2008ம் வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008ம் ஆண்டு தற்செயலாக யானைகளை துரத்திவந்த வனத்துறையினர் இந்த காட்டைப்பார்த்த பிறகுதான் காடு பற்றியும், ஜாதவ் பற்றியும் வெளி உலகிற்கே தெரியவந்தது.

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன, 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள்,விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த "முலாய் காடுகள்' 
.
யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம், இன்னும் சொல்லப் போனால் இவரைப்போன்றவர்களுக்குதான் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்க கவுரவிக்கவேண்டும்.

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

16 வயதில் மரம் வளர்க்கத்துவங்கியவருக்கு இப்போது 50 வயதாகிறது. "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் '' என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இரு ஆண்டுகளுக்கு முன் மிக "பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். "ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள், ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை, இவரது புகைப்படத்தை கூட மிகுந்த தேடுதலுக்கு பின்தான் கூகுளில் பார்க்கவே முடிகிறது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல ஜாதவ். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக்க முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம், சிறிது முயன்றுதான் பாருங்களேன்.

இயற்கையை நேசிப்போம், எங்கும் பசுமை செழிக்கட்டும்.

Friday 9 August 2013

மேட்டூர் அணையை வடிவமைத்த என்ஜீனியர் எல்லீஸ்...



மேட்டூர் அணையை வடிவமைத்த என்ஜீனியர் எல்லீஸ்...
- எல்.முருகராஜ்













இது நமது மண் இங்கேதான் நாமும்,நமது தலைமுறையும வாழப்போகிறோம், வளரப் போகிறோம். இருந்தும் நம்மில் பலருக்கு இங்கே நம் தாய் மண்ணில் ஒரு மரம் நடக்கூட நேரமில்லை, ஆனால் நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்.

அவர்தான் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
அணையின் பிரதான பகுதியில் ஆள் உயர சிலையாக நின்று தான் வடிவமைத்த அணையை பார்த்தபடி நின்று கொண்டு இருக்கிறார்.

இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.

மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தர விட்டார். இந்த உத்திரவை போட்ட கவர்னர் ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.

இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம். அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறு விளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934

அணைக் கட்ட ஆன செசலவு 4.80 கோடி

அணையின் நீளம் 5.300 அடி

அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.

அணையின் உயரம் 214 அடி

அணையின் அகலம் 171 அடி

அணையின் சேமிப்பு உயரம் 120 அடி

அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சசதுர மைல்

2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.

அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன.
மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.

இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும்,பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் ,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்லீசை, அணையும் நம் மனசும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.

முக்கிய குறிப்பு: கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கால தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் இருந்த தோற்றத்தையும் பின் அணை படிப்படியாக கட்டப்பட்ட தோற்றத்தையும் பழங்கால அபூர்வ படங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Sunday 4 August 2013

நிரம்புவது அணை மட்டுமல்ல நம் நெஞ்சமும்தான்...

நிரம்புவது அணை மட்டுமல்ல நம் நெஞ்சமும்தான்...
-எல்.முருகராஜ்










கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையாக வறண்டு கிடந்த மேட்டூர் அணை கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் மழை காரணமாக நிரம்பிவருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு , 1934-ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்ட போது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே அதிக பெரிய நீர்தேக்க அணையாகவும் விளங்கியது.

அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் நிலையில் தற்போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கிறது. நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கிறது, எங்கும் சந்தோஷம் பொங்கியிருக்கிறது.

பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணை நீரை நம்பித்தான் இருக்கிறார்கள், பிழைக்கிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து காவிரியாக கிளம்பும் ஆறு பல்வேறு கிளை நதிகளாக பிரிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் மண்ணையும், மக்கள் மனதையும் குளிர்விக்க இருக்கிறது.

கடந்த 2ம்தேதி அணையில் கூடுதல் நீர் திறப்பின் போது நேரில் போயிருந்த போது அணையின் பல்வேறு பகுதிகளுக்கு போய் அபூர்வமான படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.