Monday 30 September 2013

குற்றாலம் சித்ரசபையில் பேசும் சித்திரங்கள்...

- எல்.முருகராஜ்






குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் வலது பக்கத்தில் எந்தவித விளம்பர பலகையும் இல்லாமல் காணப்படுவதுதான் சித்ரசபை.

இந்த இடம் வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுவதால் வாகனங்கள் வந்து நின்றவுடன் "அவசரத்திற்கு' ஒதுங்கி இந்த சித்திரசபை கோவிலின் மதில் சுவரை கொஞ்சமும் மனசசாட்சி இல்லாமல் ஈரம் செய்பவர்கள், கொஞ்சம் ஈரமனதுடன் உள்ளே போய் என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்க்கலாம்.

இந்தியாவில் அமைந்துள்ள சிவாலயங்கள் ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கபடுகிறது.
சிதம்பரம் நடராசர் ஆலயம் "கனகசபை" என்றும்
திருவாலங்காடு சிவாலயம் "இரத்தினசபை" என்றும்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் "வெள்ளிசபை" என்றும்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் "தாமிரசபை" என்றும்
குற்றாலம் குற்றாலநாதர் கோவில் "சித்திரசபை" என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக கோவில்களில் விக்கிரஹ வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான். இங்கு இறைவன் ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.

சித்ரசபையில் நடராஜபெருமான் தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். சபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது.

சித்திர சபை, குற்றால நாதர் கோயிலுக்குப் அருகில் தனிக்கோயிலாக உள்ளது.

சபையின் உட்சுவற்றில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. பல நூறு வருடங்களுக்கு முன் அழியாத மூலிகை வண்ணத்தில் வரையப்பட்ட இந்த சித்ரசபையின் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்திருப்பதால் இப்போது இன்னும் பொலிவு பெற்று விளங்குகிறது. இனிமேலாவது அந்தப்பக்கம் போனால் எட்டிப்பாருங்கள்.
Click Here

கருணை உள்ளமே,காக்கி வடிவமே...

- எல்.முருகராஜ்

கோவையில் உள்ள அந்த மயானத்தில் ஒரு பிணம் புதைக்கப்படுகிறது, அந்த பிணத்தை புதைக்கும் தொழில் செய்யும் வெட்டியானை தவிர அந்த பிணத்தின் அருகில் இருந்தது ஒரே ஓருவர்தான், அவரும் உறவினரோ, நண்பரோ அல்ல. ஆனால் உறவினக்கும், நண்பருக்கும் மேலான சிரத்தை எடுத்து எல்லா "காரியங்களையும்' செய்துவிட்டு கிளம்புகிறார்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இதுவரை முந்நூறுக்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களுக்கு , ஆதரவாளனாக இருந்து கடைசிகால காரியங்களை செய்து வருகிறார்.

அவரது பெயர் சபரிராஜ்

தற்போது கோவை போத்தானூரில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து வருகிறார்.

இவரது வேலை காரணமாக பல்வேறு ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 28 வருடங்களாக காவலராகவும், தலைமைக் காவலராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களையும், அடிபட்டு இறப்பவர்களையும் உரியவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும், ஆனால் இறந்தவர்களில் தொன்னூறு சதவீதம் பேர் கேட்பாரற்று இருப்பார்கள். இதன் காரணமாக இவர்களை நல்லடக்கம் செய்யவேண்டிய பொறுப்பு போலீசார் தலையிலே விழும்.

இதற்கான செலவு மற்றும் சிரமத்தை பகிர்ந்து கொள்ள ஆள்கிடைக்காத சூழ்நிலையில், நிலையத்தில் உள்ள காவலர்கள் நொந்து கொண்டே இந்த காரியங்களை செய்வார்கள். அதுவும் மயானத்தில் எல்லாம் முடிந்து அடக்கம் செய்யும் போது அடையாளம் காண்பதற்காக எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுதான் ரயிலில் அடிபட்டு இறந்த பிணங்களை அடக்கம் செய்வதற்கான பொதுவான நடைமுறை.

ஒரு முறை இந்த பொறுப்பு சபரிராஜுவிடம் வந்தபோது, பாவம் இந்த உடலும் ஒரு உயிரைச் சுமந்திருந்த ஆத்மாதானே, அதற்கான மரியாதை தரவேண்டாமா? என யோசித்தவர், தானே இறந்த பிணத்தின் உறவாக மாறி எல்லா சிரமங்களையும், செலவுகளையும் ஏற்றுக் கொண்டு அந்திம காரியங்களை செய்தார். அப்போது அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி ஏற்பட்டது.

அதன்பிறகு இதே போல அடுத்தடுத்து பிணங்களுக்கும் இவரது மரியாதை தொடர்ந்தது, வேறு ஏதாவது ரயில் நிலையத்திலோ அல்லது வேறு ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது இந்த நிலை ஏற்பட்டாலும், "சபரிராஜிடம் சொல்லிவிடு அவர் இதை சரியாக செய்வார்' என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. அந்த எண்ணிக்கைதான் இப்போது முன்னூறை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது.

இது இவரது ஒரு பக்கம் என்றால் இன்னோரு பக்கம் தேர்வுக்கு பயந்து, சினிமா மோகம் ஏற்பட்டு ரயிலேறி வரும் சிறுவர்கள், இளம் பெண்கள் பலரை சரியான அறிவுரை சொல்லி திரும்ப பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் செய்துவருகிறார். மேலும் வழிதவறி ரயிலில் வந்துவிடும் வயதானவர்களை உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் இவரது இன்னொரு வேலையாகி விட்டது.

ஆனால் இதையெல்லாம் வேலையாகச் செய்வது இல்லை நமக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பு என்று விரும்பி செய்வார். கடந்த வாரம் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்கவர் இவரிடம் வந்து சேர்ந்தார். பெயர் அருக்காணி என்று மட்டும் சொல்லத் தெரிந்தது. இவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஒரு வாரமாக பொறுமையாக அலைந்து திரிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த ஒரு வார காலத்திற்குள் தாய்-மகன் பாசம் ஏற்பட்டுவிட, அருக்காணி உறவினர்களிடம் போக மறுத்து, " உன்கூடவே இருந்துடேறேன்ம்பா'' என்று சபரிராஜின் கையை பிடித்து கெஞ்சியபோது இருவரின் கண்களிலும் கண்ணீர்.

காக்கி சட்டையை அணியும் போது கருணையை கழட்டி வைத்து விடும் காவலர்கள் மத்தியில் ,காக்கி சட்டையுடனும் கருணையையும் சேர்த்து அணிந்து கொண்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் சபரிராஜ் உடன் பேசுவதற்கான எண்: 9843258339.


Saturday 21 September 2013

புகைப்படம் எடுப்பது என் ரத்தத்தோடு கலந்தது...


- எல்.முருகராஜ்











சத்சங்கி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1944ம் ஆண்டில் பிறந்தவர், சிறுவயது முதலே புகைப்படத்தின் மீது ஆர்வம் கொண்டவர். 1961ம் ஆண்டு ஆக்பா அறிமுகம் செய்த பாக்ஸ் டைப் கேமிராவை பதினெட்டு ரூபாய் எழுபத்தைந்து பைசாவிற்கு வாங்கி தனது புகைப்பட வாழ்வைத்துவக்கியவர்.

என்ஜினியரிங் முடித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து முடித்தவர், தற்போது சென்னையில் தன் மனைவியுடன் அழகான ஒரு பிளாட்டில் புகைப்படமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

கடந்த 89ம் ஆண்டில் இருந்து சீரியஸ் புகைப்படக் கலைஞரானவர். வைல்டு லைப், லேண்ட்ஸ்கேப், மைக்ரோ, போர்ட்ரெய்ட் என்று புகைப்பட பிரிவின் அனைத்து பிரிவிலும் தனது முத்திரையை பதித்தவர்,
படம் எடுப்பதற்காக ஹாங்காங், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, ஆஸ்திரேலியா, அலஸ்கா, தான்சானியா, கென்யா, ஜாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் போஸ்வானா ஆகிய நாடுகளுக்கு போய்வந்தவர்.
புகைப்படம் தொடர்பான சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்பவர், இவரது படங்கள் பல முறை சர்வதேச பரிசுகள் பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள போட்டோகிராபி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த புகைப்படக் கலைஞர்களின் படங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இவரது படமும் இடம் பெற்றுள்ளது என்பதே இவரது பெருமைக்கு சான்றாகும்.

நிக்கான் கேமிரா காதலரான இவர் ஒரே நேரத்தில் மூன்று கேமிராக்களையும், மூன்றுவித லென்சுகளையும் எடுத்துக்கொண்டு செல்வார்.

இவ்வளவு படங்கள் எடுத்தாலும் எந்த படங்களையும் காசாக்க நினைக்காதவர். தனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே எடுக்கக்கூடிய படங்களை பொதுமக்கள் பார்க்கவேண்டும், அவர்களும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக முன்வரவேண்டும் என்று நினைப்பவர்.

இவரது படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோகேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
இவருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்: 9884039713
Click Here

நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்...

நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்...
- எல்.முருகராஜ்



திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்த பெண் பேச்சாளரும் மேடைக்கு வந்தார். பதினைந்து நிமிடம் பேச நினைத்து வந்தவர் மாணவர்களின் ஆர்வத்தையும்,அமைதியையும் பார்த்துவிட்டு 45 நிமிடங்கள் பேசினார்.

எதுகை, மோனையுடனோ, இலக்கிய இலக்கணத்துடனோ, சவால் விடும் சரித்திர சான்றுகளுடனோ அவர் பேசவில்லை. சாதாரணமாக , ஆணித்தரமாக, மென்மையாக ஆனால் அழுத்தமாக சகோதர, சகோதரிகளிடம் பேசுவது போல பரிவுடன், பாசத்துடன் பேசினார்.

அவர் பேசினார் என்பதை விட கொஞ்சம், கொஞ்சமாய் கேட்பவர் மனதில் தன்னம்பிக்கை எனும் விதையை ஆழமாக விதைத்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவர் பேசப்பேச யார் இவர்? என்றறியும் ஆர்வம் இப்போது அரங்கில் இருந்த ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது.

யார் இவர்?

காம்கேர் கே.புவனேஸ்வரி, எந்தவித பெரிய பின்னணியும் இல்லாமல் சுயம்புவாக முளைத்தவர், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உரமாக்கி வளர்ந்தவர், தான் சார்ந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் எண்ணுபவர், இந்த எண்ணத்தினால் தனித்துவம் பெற்றவர்.
சென்னையில் உள்ள காம்கேர் சாப்ட் வேர் நிறுவனத்தின் சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குனர்.


கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்தியா தொடர்பான திட்டங்களை மட்டுமே தன் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து வெளியிட்டு வருபவர்.


சாப்ட்வேர் துறை வல்லுநர், கல்வியாளர், தொழில் ஆலோசகர், கிரியேடிவ் டைரக்டர், டாக்குமெண்டரி பிலிம் தயாரிப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளர் என்று இவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இருபதிலேயே அறுபதின் சாதனையை தொட்டவர்.

தன் நிறுவனத்தின் மூலமாகவும், தனது வாடிக்கையாள நிறுவனங்களின் மூலமாகவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியவர்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் பிரபலமாவதற்கு முன்பே தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகங்கள் எழுதியவர். தமிழ் ஆர்வாலரான இவர் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக கம்ப்யூட்டர் தொடர்பான பல புத்தகங்களை எழுதியவர், எழுதிக்கொண்டிருப்பவர்.

இவர் எழுதிய பல புத்தகங்கள் பல பல்கலைகழகங்களில் பாடபுத்தகங்களாக உள்ளன. கம்ப்யூட்டர் தொடர்பாக எழுபதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர பக்தி, இலக்கியம், சமூகம், கல்வி, குழந்தை இலக்கியம் ஆகிய தலைப்புகளிலும் எழுதி வருபவர்.

இவரது நிறுவனத்தின் மல்டி மீடியா தயாரிப்புகள் மற்றும் ஆவணபடங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் இவரே. அனிமேஷனில் உருவாக்கிய கந்தர் சஷ்டியும், அனைத்து பதிகங்களையும் கொண்ட திருவாசக மல்டி மீடியா சி.டி.,யும் மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டவையாகும்.

தனது பெற்றோர் பெயரிலான பத்ம கிருஷ் அறக்கட்டளை மூலமாக தொண்டு செய்து வருபவர். , தனது கொண்டாட்டங்கள் அனைத்தையும் ஆதரவில்லாத குழந்தைகளுடனும், மாற்றுத் திறனாளிகளுடனும் பகிர்ந்து கொள்பவர். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் போதாது என்று இருக்கக் கூடியவர், வளரும் சமுதாயம் இனிதாக மாறவேண்டும் என்ற அக்கறையுடன் கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருபவர்.


இவரைப்பற்றிய அறிமுகம்தான் இதுதான். அன்று அவர் பேசியதில் இருந்து சுருக்கமாய் சில குறிப்புகள். இந்த குறிப்புகள் அவர் மீது இன்னும் நேசம் கொள்ளச் செய்யும்.

திறமை என்பது பாட்டுப் பாடுவதும், படம் வரைவதும் மட்டுமல்ல எப்பொழுதும் சிரித்த முகத்தைக் கொண்டிருப்பது, தைரியமாக வாழ்வது, கடமை தவறாமல் இருப்பது , நட்பாய் பழகுவது, எந்த வேலையையும் நேசித்து செய்வது... இவை எல்லாம் கூட திறமைகள்தான். திறமை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது, நம்மிடம் உள்ள திறமைகளை நம் அனுபவத்தில் வெளிக்கொண்டு வருவதில்தான் வெற்றி இருக்கிறது. படிப்பு என்பது வேலைக்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே என்கின்ற எண்ணத்தை மாற்றுங்கள், பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதை முதலீடாக நினைக்காதீர்கள், ஐடி பீல்டு மட்டுமே வாழ்க்கையில்லை.

உங்கள் திறமையால் இந்த உலகை ஆள ஆயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, உங்கள் கோபம், சிடுசிடுப்பு,ஆவேசம், படபடப்பு போன்ற குணங்களை தூக்கிஎறிந்து பாருங்கள் பெரிய மாற்றம் ஏற்படும். டி.வி.,சீரியல்களில் பொழுதைக் கழிக்காமல் உண்மையான உலகத்தைக் காணவும், அனுபவம் பெறவும் வீட்டைத் தாண்டி வெளியே வாருங்கள். வெறும் படிப்பு மட்டும் போதாது உங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உலகம் வசப்படும். கனவு, கற்பனை, உழைப்போடு உங்கள் தொழிலை, வேலையை, படிப்பை நேசித்து செய்யுங்கள் வெற்றி நிச்சயம் இது என் ஆசிமட்டுமல்ல அனுபவ பூர்வமான உண்மையும் கூட. மேற்கண்டவாறு காம்கேர் கே.புவனேஸ்வரி பேசி முடித்த போது மீண்டும் அரங்கம் நிறைந்தது- இந்த முறை கைதட்டலால்.

காம்கேர் கே.புவனேஸ்வரியுடன் தொடர்பு கொள்ள எண்: 98842 80265.


Saturday 14 September 2013

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்...

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்...
-எல்.முருகராஜ்

ஊன்றி நடக்க
உறுதி கொண்டால்
ஒட்டடை நூல்கூட
ஊன்று கோல்தான்.
என்ற கவிதைக்குச் சாட்சியாக காட்சியளிப்பவர்தான் சூர்யா என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன்

நடுங்கும் கைகளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திணறி, திணறிப் பேசும் சூர்யாவாவிற்கு 23 வயதாகிறது.
இவரை நேரில் பார்ப்பவர்கள் இவரா இதையெல்லாம் செய்வது என்று நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.

அப்படி சூர்யா என்னதான் செய்கிறார் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்களேன்.

பிறந்த 6 மாதத்திலேயே சூர்யா இயல்பானவன் இல்லை என்பது தெரிந்து விட்டது. முதுகுத் தண்டுவடப் பிரச்னை காரணமாக அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி சரியாகச் செயல்படாது என்ற சூழ்நிலை.
செயல்படாத உடம்பின் பாகங்களுக்கும் சேர்த்து மூளை அபாரமாகச் செயல்பட்டது. இடதுகைப் பழக்கம் காரணமாக, இடக்கையில் எடுத்துச் சாப்பிடுவதைக் கவனித்த தாத்தா, சாப்பிடுவதையாவது வலது கையில் செய்யக் கூடாதா? என்று கேட்டதும், சற்றும் தயங்காமல், “கடவுள் எனக்கு வலது கையை இந்தப் பக்கம் வச்சுட்டான் தாத்தா”, என்று சொன்ன போது சூரியாவுக்கு வயது 3 தான். இப்படி அறிவான சூர்யாவை சென்னையில் உள்ள சிறப்பு பள்ளியில் பெற்றோர் படிக்க வைத்தனர். சூர்யாவும் இங்கு சிறப்பாக படித்தான்.

நான்காம் வகுப்பு ப் படிக்கும் போது இன்னொரு கடுமையான சோதனை,‘வாக்கரின்’ உதவியோடு நடந்து கொண்டிருந்த சூர்யாவை விளையாடிக் கொண்டிருந்த வேறு சில சிறுவர்கள் தெரியாமல் தள்ளிவிட்டதில் சூர்யாவிற்குத் தலையில் பலத்த அடி. உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள், சூர்யா இனிமேல் ‘வாக்கர்’ வைத்தும் நடக்கமுடியாது ‘வீல்சேரில்தான்’ நடமாட முடியும், இதுவரை இயங்கி வந்த கைகளும் வழக்கம் போல இயங்காது, ஒருவித நடுக்கத்துடன்தான் செயல்படும், பேசும்போது வார்த்தைகள் ரொம்பவே திக்கும், என்று சொல்லிவிட்டனர். இந்த வேதனையை எல்லாம்கூடத் தாங்கிக் கொண்ட சூரியாவால் பள்ளியில் படிப்பைத் தொடரமுடியாது என்ற வேதனையைத்தான் தாங்கமுடியவில்லை.

வீட்டிலிருந்தபடியே படிக்க ஆரம்பித்தான். தனது அண்ணனின் கம்ப்யூட்ரைப் பொழுது போக்காக இயக்க ஆரம்பித்தான். நடுங்கும் தனது கைகளைக் கொஞ்சமாவாது நிலையாக நிறுத்த அது ஒரு பயிற்சியாக இருந்தது; அண்ணனும் தனக்குத் தெரிந்ததைத் தம்பிக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுத்தார். கம்ப்யூட்டரே தனக்கான வடிகால் என்று சூர்யா எடுத்துக் கொண்டதும் அதில் முழுமூச்சாக இறங்கிவிட்டான்.

கம்ப்யூட்டரை ஆராய்ந்து, ஆராய்ந்து இத்தனை வருடங்களில் அதில் தேர்ந்து விட்ட சூர்யா இப்போது அகில இந்திய அளவில் செயல்படக்கூடிய பெரிய சிறிய நிறுவனங்களின் வெப் டிசைனர் ஆவார்.
நிறுவனங்கள் பெரியதோ, சிறியதோ தம்மைப் பற்றி வெளியில் சொல்ல ஒரு வெப் சைட் அவசியம் தேவை, அந்த வெப்சைட் பார்ப்பவர்களை ஈர்க்கும்படியாக இருக்க வேண்டும், எல்லாவிதத் தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு வெப் சைட்டை உருவாக்கித் தருவதுடன், அனிமேசன் மற்றும் ஆடியோ வீடியோ எடிட்டிங் போன்ற அருமையான புத்திசாலித்தனமான துறைகளிலும் ‘ஒன்மேன்ஆர்மியாக’ சூர்யா தற்போது சாதித்து வருகிறார்.

புகழ் பெற்ற திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் நிறுவனமான MENAKA CARDS PVT LTD,NORTH EASTERN MARITIMES SERVICE PVT.LTD,BUDGET FURNITURE,IMPERIAL INFOTECH,VARNA உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வெப் சைட்கள் இவர் டிசைன் செய்தவைதான்.

சூர்யாவின் தந்தை காவல்துறையின் கைரேகைப் பிரிவில் இன்ஸ்பெக்டராக சென்னையில் இருந்தவர். பணி ஒய்வுக்குப் பிறகு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றுவிட்டார். சூர்யா தற்போது பொள்ளாச்சியில் இருந்து கொண்டுதான் இயங்கிக் கொண்டு இருக்கிறார். தந்தை பாலகுருசாமி, தாயார் தேன்மொழி, அண்ணன் நாகசுந்தரம், அண்ணி மதுமதி ஆகியோர், ‘எப்படியும் நம்ம சூர்யா நாலுபேர் பாராட்டும்படி வருவான்’ என்ற நம்பிக்கையுடன் அன்பையும், பாசத்தையும் வற்றாது வழங்கி வருகின்றனர்.

அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப, பல இரவுகளைப் பகலாக்கிக் கடுமையாக உழைத்து, நல்லதொரு வெப் டிசைனராக வளர்ந்து வரும் சூர்யா தனக்கு உற்றுழி உதவிய பக்கத்து வீட்டு அண்ணன்கள் சதீஷ், காளிராஜ் , மற்றும் பல நண்பர்களையும் உறவினர்களையும் மிகுந்த நன்றியோடு நினைவு கூறுகிறார்.
இவ்வளவு திறமையா என்று இவரது வெப் டிசைனைப் பார்த்தவர்கள் பாராட்டுகின்றனர்.

ஆனால், சூர்யாவின் அணுகுமுறை வேறாக இருக்கிறது; என்னைப் பார்த்து என் மீது இரக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் எனக்கு வேண்டாம்; என் திறமையை, என் கற்பனையை, என் தொழிலை மட்டும் பாருங்கள்; பின் உங்கள் நிறுவனத்தின் வெப் சைட்டை டிசைன் செய்ய எனக்கொரு வாய்ப்புத் தாருங்கள்; அது போதும் என்று சொல்லும் சூர்யாவின் ஆற்றலை அறிய, கிரியேடிவ் இ ஸ்டுடியோ.காம் (creative E studio.com) என்ற வலைதளத்துக்குச் செல்லவும்.

அவரது அலைபேசி எண்: 9790741542.


Thursday 12 September 2013

உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்.


 நண்பர்களுக்கு வணக்கம்.

வருகின்ற 14/9/13 ந்தேதி சனிக்கிழமை எனக்கு ஒரு முக்கியமான நாள்

காரணம் அன்றுதான் எனது இருபத்தைந்தாவது திருமண நாள், ஆமாம் வெள்ளி விழாவேதான்.

வழக்கமாக நான் எனது திருமண நாளை மறந்துவிடுவேன்

“என்னங்க இப்படி கிழக்கு பக்கமாக வந்து நில்லுங்க”, என்று சொல்லிவிட்டு ‘தொபுக்கடீர்’ என வருடத்தில் ஒருநாள் என் திருமதி கலைச்செல்வி என் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்றால் அன்றுதான் என் திருமண நாள் என்பது நினைவிர்க்குவரும்.எழுந்த வேகத்திலேயே உங்களுக்கு எதுதான் நினைவிற்கு வந்தது ‘இது’ நினைவிற்கு வர என்று அன்றைய திருமண ‘வாழ்த்தையும்’ பதிவு செய்வார்.

அதே போல மதுரை பத்திரிகையாளரும்,நண்பரும்,கவிஞருமான திரு.திருமலை  அன்று மதியம் கிடைப்பது போல  கூரியரில்  திருமண நாள் வாழ்த்தை அனுப்பி ‘ஆறுதல்’ சொல்வார்.

உண்மையில் என்னை வாழ்த்துவதை விட என் திருமதியை இந்த தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

எப்போது சிரிப்பான்,எப்போது சீரியசாக இருப்பான்,எப்போது வேலைக்கு போவான்,எப்போது திரும்பி வருவான் என்று எதுவுமே தெரியாத, எப்போதும் புத்தகத்தையே (தற்போது கூடுதாலக கம்ப்யூட்டரையும்) கட்டிக்கொண்டு அழும் கணவனாகப்பட்ட என்னோடு கடந்த இருபத்தைந்து வருடங்களாக மல்லுக்கட்டிக்கொண்டு குடும்பம் நடத்தும் உத்தம புத்திரி அவர்.

..என் தேவையை யாரறிவார் உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்.
என்ற வியட்நாம் வீடு படப்பாடல் வரிகள்
என் துணைவியாருக்காகவே பாடப்பட்டது போன்ற வரிகளாகும்.

...என்னை, எனக்கே பிடிக்காத போது
உனக்கு மட்டும் நான் பிடித்து போனதெப்படி

எல்லோரும் என் முகம் பார்த்தபோது
நீ மட்டும் அகம் பார்த்தாயோ...

என்று நான் எழுதிக்கொடுத்ததை நல்ல
கவிதை என்ற நடமாடும் கவிதையவள்.

அவளை அல்ல அவரை இந்த வெள்ளி விழா திருமண நாளிலாவது பெரிய ஒட்டலுக்கு அழைத்துப்போய் ‘மெனு’ வாங்கி அதில் ‘விலைப்பட்டியல் பார்க்காமல்’நல்ல உணவு ஆர்டர்  செய்து வாங்கித்தர வேண்டும்.

வாழ்த்துங்கள் நன்றி!

அன்புடன்
எல்.முருகராஜ்

Sunday 8 September 2013

அந்த ஒரு நாள்...

அந்த ஒரு நாள்...
- எல்.முருகராஜ்


கடந்த வார நிஜக்கதை பகுதியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிடமுடியாது.

முதல் நாள் அறிமுகமானவர் மறுநாள் காலை இறந்துபோவார் என்பதை யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.

திருவண்ணாமலை சிவ பக்தையும், பெண் துறவியுமான பாண்டிய லதாவின் மறைவு அனைவரையும் உலுக்கியெடுத்துவிட்டது, ஆனால் ஆதரவில்லாமல் அநாதை பிணம் என்று எரிக்கப்பட இருந்தவர் வாசகர்கள் எடுத்துக் கொண்ட அக்கறை காரணமாக திருவண்ணாமலையில் துறவியருக்கான சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.



அந்த ஒரு நாள் நடந்தது என்ன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

தேனியைச் சேர்ந்தபாண்டியலதா, சிவன் மீது கொண்ட பக்தி காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு திருவண்ணாமலை வந்தடைந்தார்.

இங்கு இருந்தபடி காசி, அமர்நாத் யாத்திரைகள் போய் வந்தவர் பெரும்பாலான சிவத்தலங்களை தரிசித்து விட்டார், திருக்கழுக்குன்றம் தாமோதரன் சுவாமிகள் நடத்தும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் இவர் ஆஜராகிவிடுவார்.

சீர்காழியில் கடந்த மாதம் நடந்த முற்றோதல் நிகழ்ச்சிக்கு நிறைய ருத்ராட்ச மாலைகள் அணிந்தபடி வந்திருந்த இவரை பேட்டி எடுத்து பிரசுரித்தோம். கட்டுரையின் முடிவில் இவரது போன் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தோம்.
கட்டுரை கடந்த சனிக்கிழமை (31ம் தேதி) காலை 8 மணியளவில் வெளியானது.அதுவரை அவரிடம் நான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன், கட்டுரை வெளியானதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் அவரிடம் வாசகர்கள் அன்பொழுக போனில் பேசியிருக்கின்றனர்.

நம் மீது அன்பு பராட்டவும், விசாரிக்கவும் இவ்வளவு பேரா என்று வியந்து போய் இந்த நாள் என் வாழ்க்கையின் இனிய நாள் மறக்கவே முடியாத நாள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஒசூர் சந்திரசூடர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சிக்கு சென்றவர் ஒரு இடத்தில் ரோட்டைக் கடக்கும் போது வேகமாக வந்த பஸ் மோதியதில் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.

அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் கிடத்தப்பட்ட அவரைப் பற்றிய விவரங்கள் அறிய முடியாத போலீசார் இரண்டு நாள் பார்ப்போம் யாரும் கேட்டுவராவிட்டால் அநாதை பிணம் கணக்கில் சேர்த்து எரித்துவிடுவோம் என்று முடிவு செய்திருக்கின்றனர்.

பிணமான நிலையில் இவரை ஆஸ்பத்திரியில் பார்த்த ஊழியர் ஒருவர் இணையதளத்தில் இவரைப் பற்றி முதல் நாள் வந்த செய்தியை படித்துள்ளார்.உடனடியாக கட்டுரையில் குறிப்பிட்ட பாண்டிய லதாவின் போன் எண்ணுக்கு அடித்துள்ளார்.

யாரோ ஒரு அடியார் கொடுத்த மொபைல் போன் அது,அந்த போனை அவர் பொருட்டாக மதிப்பது கிடையாது பெரும்பாலும் தெரிந்த திருவண்ணாமலை டீ கடைக்காரரிடம்தான் கொடுத்து வைத்திருப்பார். போனை எடுத்த டீகடைக்காரர் ஆறுமுகம் என்பவர் பாண்டியலதா ஒசூருக்கு போய் இருக்கும் விவரத்தை கூறியிருக்கிறார்.

இதன் மூலம் இறந்து போனது பாண்டியலதா என்பது உறுதியானதும் டீகடைகாரர் ஆறுமுகத்திடம் நடந்த விவரத்தை கூறியிருக்கிறார் பிறகு தினமலர் இணையதளம் பிரிவிற்கும் போன் செய்து கூறியுள்ளார். தகவல் எனக்கும் வந்து சேர்ந்தது, அதிர்ந்து போனேன்.

பிறகு அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினேன். இதற்குள் பாண்டியலதா உபயோகித்த போன் அவர் அடிக்கடி செல்லக்கூடிய திரு அருட்பால் குகைஆஸ்ரமத்தின் நிர்வாகியான சிவ சீனிவாசசுவாமிகளிடம் போய்ச் சேசர்ந்தது. அவர் அவரது உதவியாளர் பிரபுவிடம் கொடுத்து வைத்திருந்தார்.

இறந்து போனது பெண் அடியார் அவரை உரிய முறையில் மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர் ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்பது தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில்தான் நான் அவர்களுடன் பேசினேன்.

பெண துறவியின் உடலை எந்தவித பிரச்னையும் இல்லாமல் பெற்று ஆம்புலன்சில் ஏற்றி விடுகிறோம் நீங்கள் அடக்கம் செய்வதற்கான வேலைகளை பாருங்கள் என்றதும் ஒரு பத்திரிகை நிறுவனம் ஒரு அடியவர்க்கு பின்புலமாக நிற்பதை அறிந்ததும் அவர்களும் புதுதெம்பு வரப்பெற்றவர்களானார்கள்.

தர்மபுரி நிருபரின் உதவியுடன் மாவட்ட போலீஸ் எஸ்பியுடன் பேசி விவரம் சொன்னதும் பிறகு காரியங்கள் மடமடவென்று நடந்தது. இலவசமாக ஆம்புலன்சில் அவரது உடலை திருவண்ணாமலை கொண்டு போய் ஒப்படைக்கும் ஏற்பாடுகளும் நடந்தது.

 ஓசூர் பகுதி பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு ஆஸ்பத்திரி சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் இறந்தவர் நாம் நினைத்தது போல யாருமில்லாத ஆதரவில்லாதவர் அல்ல, மிக முக்கியமானவர் என்பதை உணர்ந்து அதற்கேற்ற மரியாதை கொடுத்தனர்.

ஆஸ்ரம நண்பர் கிருஷ்ணன் என்பவர் உடலை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலை வந்தார். இதற்குள் அவர் பேட்டியின் போது ஒரு இடத்தில் எனது பூர்வீகம் பெரியகுளம் என்றும் கணவர் குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் சொல்லியிருந்தார்.அந்த ஒரு வரியை வைத்து தேடி இறந்த பாண்டிய லதாவின் கணவர், இரண்டு பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் தகவல் தரப்பட்டு காரில் திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.

இரவு 9 மணியளவில் திருவண்ணாமலை இடுகாட்டிற்கு பாண்டியலதாவின் உடல் கொண்டு வரப்பட்ட போது சிவனடியார்கள் கூட்டம் திரண்டு இருந்தது. எண்பது கிலோவிற்கு பூவாங்கி அதில் படுக்கவைக்கப்பட்டார், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர் காசி தீர்த்தம், கபில தீர்த்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டார். சுற்றிலும் சூடம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த அவரது குடும்பத்தினரும் தங்களது சார்பில் இறுதி மரியாதை வழங்கினர்.

பின்னர் அனைவரது கண்களும் கலங்க பூவால் நிரப்பட்ட குழியினுள் அடக்கம் செய்யப்பட்டார்.

அதுவரை அமைதியாக சூழ்ந்திருந்த மழை மேகம் இப்போது பன்னீராய் மழையை தெளித்தது.

அந்த ஒரு நாள் அவரோடு பேசி அவரை ஆனந்தத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்றதுடன் இறந்ததும் அந்த ஆன்மா அமைதியடைய பதிவும் போட்டு அன்பே சிவம் என்பதை உணர செய்த வாசகர்கள் அனைவருக்கும் கண்ணில் நீர் பெருக நன்றி கூறிக்கொள்கிறோம்.


Saturday 7 September 2013

நிஜக்கதைகள்....: காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார்

நிஜக்கதைகள்....: காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார்: காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார் - எல்.முருகராஜ் தேசபக்தி, ஒருமைப்பாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தி வந்த க...

காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார்

காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார்
- எல்.முருகராஜ்




தேசபக்தி, ஒருமைப்பாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தி வந்த கிராமியக் கலைகள் தற்போது மேற்கத்திய கலாச்சாரத்தினாலும், சினிமா மோகத்தினாலும் மங்கி வருகிறது, ஆனாலும் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பொக்கிஷம் போன்ற கிராமிய கலைகள் முற்றிலும் மறைந்துவிடாமல் காப்பாற்றிவரும் கிராமிய கலைஞர்களில் ஒருவர்தான் சா.முத்துக்குமார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தற்போது திருச்சி துறையூர் பகுதியை வசிப்பவர் . காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார் என்றால் சின்ன பிள்ளைகூட அவரை அடையாளம் காட்டும்,

அந்த அளவிற்கு இந்த காளியாட்டக்கலையில் இருபத்தைந்து வருட அனுபவங்களைக் கொண்டுள்ள இவர் இதற்காகவே தான் பார்த்து வந்த போக்குவரத்துக்கழக வேலையையே தூக்கிப் போட்டவர்.

சிறுவயது முதலே நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டவர் முதலில் கவனம் செலுத்தியது பரதநாட்டியத்தில்தான், பின் ஒரு முறை காளியாட்டத்தை பார்த்தது முதலே அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

காளியாட்டம் என்பது இருப்பதிலேயே சிரமமான ஆட்டமாகும். எட்டு கைகள் மற்றும் உடைகள் அலங்காரங்கள், ஆபரணங்கள் என்று சுமார் பத்து கிலோ எடையை தூக்கிக் கொண்டு ஆட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும், ஆடி முடித்த பிறகு மேக்கப்பை கலைக்கவும் இரண்டு மணி நேரமாகும். கண்களுக்கு மேல் கண்மலர் என்ற கண்ணைப்போன்ற வடிவம் கொண்ட இரும்புத் தகடை பொருத்திக் கொள்வோம், இதில் உள்ள ஒரு சிறு ஓட்டையின் மூலம் கிடைக்கும் எழுபது சதவீத பார்வையை வைத்துதான் அரங்கம் முழுவதும் ஆவேசமாக நடனமாடுவோம். எவ்வளவோ பேரை மகிழ்ச்சிபடுத்த நமக்கு கிடைத்த வாய்ப்பு என்று எடுத்துக்கொள்ளும் போது எல்லாம் எளிதாகி விடுகிறது.
இந்த நடனம் என்னை பல்வேறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது, கலைமாமணி விருதினை பெற்றுத் தந்துள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள காளியாட்டத்தை இன்னும் பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
காளியாட்டக்கலைஞர் முத்துக்குமாருடன் தொடர்பு கொள்ள: 9942533228.