Saturday 8 June 2013

"புகைப்படம் எடுப்பது டானிக் சாப்பிடுவது போல''- சொல்கிறார் விவேகானந்தன்


- எல்.முருகராஜ்









அந்த பாலைவனத்தின் நடுவே ஒவியம் வரைந்தது போல ஒட்டகங்களை மனிதர்கள் நடத்திச் செல்கிறார்கள். அதனை புகைப்படமாக பலரும் பலவித கோணங்களில் எடுக்கிறார்கள். அதில் ஒருவர் தலையும், தாடியும் நரைத்த நிலையில் மூன்று கேமிராக்களை தொங்கவிட்டுக்கொண்டு ஒரு இளைஞரின் விறு,விறுப்போடும், விவேகத்தோடும் வித்தியாசமாக படம் எடுக்கிறார்.

அனைவரது படங்களும் அன்று மாலை போட்டுக் காண்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. அந்த படங்களில் வித்தியாசமானதாக இருந்ததாக பலராலும் பராட்டப்பெற்ற படங்கள் அந்த பெரியவர் எடுத்ததுதான்.

புகைப்பட பிரியர்களால் விவி என்று மரியாதையுடன் அழைக்கப்படும், அனைவரையும் "காட் பிளஸ் யு' என்று வாழ்த்தக்கூடிய அந்த பெரியவரின் பெயர் பி.ஏ.விவேகானந்தன்.

‌சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர், கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைக்கு சேர்ந்தவர், முதல் சம்பளத்தில் வாங்கிய முதல் பொருளே கேமிராதான்.

இப்போது 72 வயதாகும் விவேகானந்தனுக்கு புகைப்படங்கள் எடுப்பது என்றால் உயிர், அதுதான் என்னை "டானிக்' போல செயல்பட்டு உற்சாகமூட்டிக் கொண்டு இருக்கிறது, சந்தோஷம் கொடுக்கிறது. கேமிராவைக் கையில் எடுத்துவிட்டால் எனது எல்லா கவலைகளையும் மறந்துவிட்டு உல்லாச பறவையாகி விடுகிறேன்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக எனது தோளில் தொங்கும் கேமிரா எடுக்காத படங்களே இல்லை. நான் போகாத ஊரும் இல்லை. நான் ஒரு பயணக்காதலன். விடுமுறை கிடைத்தால் போதும் கேமிராவோடு ஏதாவது ஒரு வட மாநிலத்திற்கு போய்விடுவேன்.

இதுதான் ஏரியா என்று வைத்துக் கொள்வது இல்லை, எந்த படமாக இருந்தாலும் அதை அழகாக, வித்தியாசமாக உயிரோட்டமாக வெளிக்கொணர முயற்சிப்பேன், இருந்தாலும் "டேபிள் டாப்' படங்கள் எடுப்பது என்பது எனக்கு அத்துபடியான விஷயம் என்கிறார். இவரது படங்களை நிறைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

இவரது படங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு சொந்தமான முக்கிய அலுவலகங்களில் இப்போதும் நிரந்தர புகைப்பட கண்காட்சியாக அலங்கரித்துக் கொண்டு உள்ளது.

பாங்க் வேலையில் இருந்து ஒய்வு பெற்றபிறகு இப்போது இன்னும் தனது பயணத்தை விரிவுபடுத்திக் கொண்டுள்ளார், சமீபத்தில் அமெரிக்கா போய் அங்கும் நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

இவ்வளவு புகைப்படம் எடுக்கிறாரே ஆனால் இதை எப்போதுமே காசாக்க முயன்றதில்லை, இது எல்லாமே எனது தனிப்பட்ட சந்தோஷத்திற்காக மட்டுமே என்கிறார். இங்கே துவங்கி அமெரிக்கா வரை உள்ள பல புகைப்பட கழகங்களில் உறுப்பினராவார்.

இவர் தனது படங்களை, தனது கலையை, தனக்குள் முடக்கிக் கொள்ளவில்லை, புகைப்படம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கிறார். புகைப்படம் தொடர்பான போட்டிகளுக்கு நீதிபதியாக சென்று வருகிறார், புகைப்பட பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தற்போதைய நவீனம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

பலருக்கு குருவாக இருந்தாலும் இவர் தனது குருவாக பாக்கியதுரை, சாய்நாத், வாசுதேவன் உள்ளிட்டோரை கருதுகிறார். பிர்லா குழுமத்தைச் சேர்ந்த கே.ஜி.மகேஷ்வரி, மற்றும் டி.என்.ஏ.பெருமாள், கே.பொன்னுசாமி ஆகியோர்களுடன் அமர்ந்து புகைப்பட நீதிபதியாக செயல்பட்டதையும், மதுரை புகைப்பட கருத்தரங்கில் பலர் முன்னிலையில் தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதியால் கவுரவிக்கப்பட்டதையும் பெருமையாக கருதுகிறார்.

யாரும் எனது படத்தை உபயோகிக்ககூடாது "காப்பி ரைட்' இருக்கு என்று சொல்லும் இந்தக் காலத்தில், பிளிக்கர்.காமில், விவி1942 என்று பிரவுஸ் செய்தால் நான் எடுத்த படங்கள் அனைத்தும் வரும், எனது எந்த படங்களை வேண்டுமானாலும் யாரும் எடுத்து இலவசமாக கையாளலாம் என்று சொல்லக்கூடியவர் இவர்.
விவேகானந்தனுடன் தொடர்பு கொள்ள: 9790970221.

முக்கிய குறிப்பு: இவர் எடுத்த சில படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியில் பார்க்கவும்.


No comments:

Post a Comment