Saturday 29 June 2013

ஆழ்வார்திருநகரியில் ஒரு பொக்கிஷம்; பக்தி சொற்பொழிவாற்றும் பாலகன் சடஜித்...
- எல்.முருகராஜ்


ஆழ்வார்திருநகரி

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் உள்ள புனித ஸ்தலம், நவதிருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வார் அவதரித்த பெருமையும் பெற்ற தலமுமாகும்.

இப்போது இந்த தலத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறான் சிறுவன் சடஜித் என்கின்ற கீதாசசார்யன்.
எட்டு வயதே ஆன சிறுவன் சடஜித் இன்று நாடறிந்த நல்ல பக்தி சொற்பொழிவாளன் என்றால் பலராலும் நம்ப முடியாது, ஆனால் பக்தி ரசம் சொட்டச் சொட்ட அவன் நிகழ்த்திய பஞ்ச கல்யாண உபன்யாசம் கேட்டபிறகு நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

கதை சொல்லும் பாணியும், உப கதைகளை எடுத்துவிடும் சாதுர்யமும், உபன்யாசத்திற்கு உண்டான நகைச்சுவையை அருமையாக கையாளும் வித்தையும், உதாரணத்திற்கு எடுத்துச் சொல்லும் நாலாயிரதிவ்ய பிரபந்தங்களும் அப்படியே மலைக்கவைக்கிறது, வியப்பின் உச்சிக்கு கொண்டு போகிறது.

சென்னையில் செல்வன் சசடஜித்தின் உபன்யாசம் முடிந்ததும், மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியது இந்த சிறுவன் ஒருவனின் நிகழ்ச்சிக்குதான் என்று பல உபன்யாசங்களை பார்த்தவர் அதிசயித்து சொல்கிறார்.

சடஜித்திற்கு இதெல்லாம் ஒரே இரவில் மாயஜாலம் போல நிகழ்ந்துவிடவில்லை பின்னணியில் பெரிய பாரம்பரியமும், தந்தை ஸ்ரீராம், தாய் பத்மா, தாத்தா ஸ்ரீநிவாச பூவராஹாசாரியரின் ஆசியும், சடஜித்தின் அளவுகடந்த ஆர்வமும் இருக்கிறது.

உபன்யாசம் செய்வதை பகவானின் கைங்கர்யமாக கருதும் இளையவில்லி பராம்பரியத்தில் வந்த சிறுவனே சடஜித். சடஜித்தின் கொள்ளு தாத்தா சடகோபாச்சார்யர், தாத்தா ஸ்ரீநிவாச பூவராஹாசசாரியர், அப்பா ஸ்ரீ ராம் என்று அனைவருமே உபன்யாசம் நிகழ்த்துபவர்கள்தான்.

சடஜித்தின் தாத்தா ஸ்ரீநிவாச பூவராஹாச்சாரியர் சமஸ்கிருதத்தில் தங்க மெடல் வாங்கியவர், பெங்களூருவில் பேராசிரியராக பணியாற்றிவர், பிரமாதமாக உபன்யாசம் செய்பவர், பேராசிரியர் வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு பெங்களூரில் தீவிரமாக உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டு இருந்தார். திடீரென பார்வையில் பிரச்னை ஏற்படவே, மகன் ஸ்ரீராம் தான் பெங்களூருவில் பார்த்துக்கொண்டிருந்த கிராபிக் டிசைனர் வேலையை தூக்கிப்போட்டுவிட்டு தந்தைக்கு "கண்ணாக' இருந்து உதவினார்.

பின்னர் ஸ்ரீநிவாச பூவராஹாச்சாரியர் சொந்த ஊரான ஆழ்வார்திருநகரியில் பெருமாளுக்கு பூஜை காரியங்கள் செய்ய சரியானஆளில்லை என்பதை உணர்ந்ததும், பெங்களூருவில் இருந்து ஆழ்வார் திருநகரிக்கு குடிபெயர்ந்தார்.

இங்குள்ள பெருமாளுக்கு பூஜை காரியங்களையும், மாலை நேரங்களில் உபன்யாசங்களையும் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார். தந்தையின் நிழலாக இருந்து அவரது விருப்பப்படி கோயில் பூஜை காரியங்கள் செய்வதையும், உபன்யாசம் நிகழ்த்துவதையும் ஸ்ரீராம் ஒரு ஈடுபாட்டுடன் செய்ய ஆரம்பித்தார். இதன் காரணமாக பத்து ஆண்டுகளில் நாடறிந்த நல்லதொரு உபன்யாசகராக புகழ்பெற்று விளங்குகிறார்.

கிராபிக் டிசைனராக இருந்த ஸ்ரீராம் கொஞ்சமும் எதிர்பாராமல் உபன்யாசம் செய்பவராய் மாறியது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றால் அவரது மகன் சடஜித் சிறுவயதிலேயே உபன்யாசம் செய்வதில் இறங்கியது அதைவிட கொஞ்சமும் எதிர்பாராதது.

சடஜித் பற்றி ஸ்ரீராம் பேசும்போது மிகவும் பூரித்துபோகிறார், "அப்பா சொல்லும் புராண கதைகளையும், வார்த்தைகளையும் சடஜித் தனது மழலைக்குரலில் தப்பில்லாமல் சொன்ன போது ரொம்பவே ஆச்சர்யப்பட்டு போனோம். சேலத்தில் மூன்று மணி நேரம் உபன்யாசம் செய்ய வேண்டிவந்தது, இடையிடையே ஒரு பத்து நிமிடம் சடஜித் தனக்கு தெரிந்த புராண குட்டிக் கதைகளை சொல்ல ஆரம்பித்தான், அன்று விழுந்த கைதட்டல் மொத்தமும் அவனுக்கே. அப்போது அவனுக்கு வயது மூன்றுதான்.

அதன் பிறகு படிக்கும் நேரம் போக உபன்யாசத்தில் ரொம்பவே ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்தான், தாத்தாவிடமும், என்னிடமும் நிறைய சந்தேகங்களை கேட்பான். பத்து நிமிடம் பேச ஆரம்பித்தவன், பிறகு கொஞ்சம், கொஞ்சமாக நேரத்தை கூட்டி இப்போது ஒன்றரை மணி நேரம் உபன்யாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளான்'', சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை கோயிலில் கடந்த ஆண்டு மார்கழி மாதம் முப்பது நாளும் ஆண்டாள் பாடிய திருப்பாவை தொடர் உபன்யாசம் நிகழ்த்தினான், ஏழு வயதில் இப்படி தொடர் உபன்யாசம் நிகழ்த்தியது உலகிலேயே இவன் ஒருவனாகத்தான் இருக்கமுடியும் என்று பெருமையுடன் கூறி முடித்தார் ஸ்ரீராம்.

சடஜித்தை செதுக்கியதில் அவனது தாயார் பத்மாவிற்கு பெரும் பங்கு உண்டு, கடவுள் மீதும், கணவர் மீதும் கொண்ட பக்தி காரணமாக சென்னையில் எம்சிஏ படித்தவர், தான் பார்த்துவந்த கார்ப்பரேட் வேலையை தூக்கிப்போட்டுவிட்டு, ஆழ்வார்திருநகரிக்கு சென்றவர் பெண்கள் குல திலகமாக இருந்துவருகிறார்.

எதையும் எதிர்பாராமல், எளிமையும், உண்மையும், பக்தியும், பண்பும், அன்புமே வாழ்க்கையின் பிரதானம் என்று வாழ்ந்து வருபவருக்கு தனது குழந்தை சடஜித் ஒரு ஞானக்குழந்தை என்று தெரிந்ததும், அந்த ஞானத்தை சுடர்விட்டு பிராகாசிக்க செய்து வருகிறார். முப்பது நாள் தொடர்ந்து உபன்யாசம் சொல்லவைத்தல், டி.வி.,களில் பேசவிடுதல், பக்தி மேடைகளில் இடம் பெறச் செய்தல் என்று சடஜித்தைமேலும் மேலும் மெருகேற்றும் வேலையை அற்புதமாக செய்து கொண்டு இருக்கிறார், சடஜித் நான்காவது படிக்கும் பள்ளி மாணவன் என்பதால் அந்த பருவத்து மகிழ்ச்சி, படிப்பு என்று எதையும் இழந்துவிடாமல் முக்கியமாக பார்த்துக் கொள்கிறார். சடஜித் படிப்பிலும் படு சுட்டி, பேச்சு போட்டி விளையாட்டு போட்டிகளில் இன்றைக்கும் பல பரிசுகள் பெறும் சிறந்த மாணவன்.

இவன் படிக்கும் ஆழ்வார்திருநகரி மாளவியா பள்ளிக்கும் சரி, அதன் தாளாளர் எம்.வேலுவிற்கும் சடஜித் என்றால் மிகவும் செல்லம். தனது படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தனது மனதிற்கும் பிடித்துப்போய் தாத்தா தந்தை தாய் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே எந்த நிகழ்ச்சிக்கு செல்கிறான். இப்படிபட்ட குழந்தையின் அறிவு, ஞானம் உலகமெங்கும் பரவட்டும் என்பதற்காக உபன்யாசம் நிகழ்த்தும் நாட்களிலும், வெளியூர் நிகழ்விலும் கலந்து கொள்ள பள்ளி நிர்வாகம் பெருமையுடன் அனுமதி தருகிறது, இதற்காக நாங்கள் பள்ளிக்கு ரொம்பவே நன்றிக் கடமைபட்டு உள்ளோம் என்கின்றனர் ஸ்ரீராம்-பத்மா தம்பதியினர்.

வட மாநிலங்களில் உபன்யாசம் செய்பவர்களை கொண்டாடுகின்றனர், ஆனால் தமிழகத்தில் இந்த அற்புதமான அரிய ஆன்மிக உபன்யாசத்திற்கு போதுமான வரவேற்பு இல்லாததால், உபன்யாசம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போய் இன்றைக்கு விரல்விட்டு எண்ணி விடுபவர்கள்தான் உள்ளனர். 

இந்த நிலையில் சிறுவன் சடஜித் தேய்ந்துவரும் உபன்யாச கலையை இன்றைக்கு தாங்கியும், உயர்த்தியும் பிடித்து வருகிறான் என்பதில் பலருக்கும் மகிழ்ச்சியே. தனது தனித்துவமிக்க உபன்யாசத்தின் மூலம் நிகழ்காலத்திலேயே புகழின் உயரங்களை தொட்டுள்ள சடஜித் விரைவில் அதன் சிகரங்களையும் தொடுவார், தொடவேண்டும் என்பது உபன்யாச பிரியர்களின் விருப்பம் மட்டுமல்ல வேண்டுதலுமாகும்.

இளையவில்லி கீதாச்சார்யன் என்ற செல்வன் சடஜித் பேசி, பதிவு செய்யப்பட்ட உபன்யாசம் மற்றும் பஞ்ச கல்யாணம் குறித்த ஆடியோ சிடியின் தேவைக்கும் , சடஜித்தை உபன்யாசம் நிகழ்த்துவதற்கு அழைப்பதற்கும் பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ளவும்: 9443695147.



No comments:

Post a Comment