Monday 31 March 2014

பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்..

பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்..
- எல்.முருகராஜ்









"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே''
இது கங்கைக்குத் தங்கக் கவிதா மகுடம் சூட்டி பாரதி பாடிய வரிகள்.

இதன் மூலம் அவர் காசியையும், கங்கையையும் எந்த அளவு நேசித்திருப்பார் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

39 வயது வரை வாழ்ந்த உலக மகா கவி பாரதியின் தன் வாழ்க்கையின் இளமைப் பிராயமான 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903) காசியில் தங்கி கல்வி கற்றதுதுடன் கலை கலாச்சார பொது அறிவு விஷயங்களையும் பெற்றார்.

1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.

காசியில் கங்கை கரையோரம் உள்ள வீட்டில் அத்தை மாமாவோடு தங்கலானார். பின்னர் காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். அலகாபாத் சர்வ கலாசாலை பிரவேசப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, பலரும் பாராட்டும் நிலை அடைந்தார். பாரதியின் உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு அப்போதே வியந்தார்கள்.

கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். காசி வாசம், பாரதி உள்ளத்தில் ஒரு புதிய இனம் தெரியாத பரவசத்தை ஊட்டிற்று. காசி நகரில், பல இடங்களுக்கும் சென்று வருவது அவருக்கு வழக்கமாயிற்று. நடந்தேதான் செல்வார்.

வீடு என்று இருந்தால் வரி கட்ட வேண்டும் அதுவே மடம் என்று இருந்தால் வரி விலக்கு உண்டு. இது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் சட்டம்.இந்த சட்டத்திற்காக பாரதியின் மாமா தனது வீட்டை சிவ மடம் என்றாக்கினார். நிறைய பண்டிதர்கள் வந்து போவார்கள். பண்டிதர்களிடையே பாரதி எப்போதுமே தீவிரமாக பேசுவார் அதிலும் குறிப்பாக பெண் விடுதலை, பெண் கல்வி குறித்து காரசாரமாக விவாதிப்பார். இவர் ஒரு ஞானவான் என்பதை மட்டும் உணர்ந்தவர்கள் அதற்கு மேல் இவரை உயர்த்த முடியாததால் பின் அங்கு இருந்து கிளம்பி மீண்டும் எட்டயபுரம் வந்தார்.

பாரதி தனது உடையிலும் தோற்றத்திலும் மாற்றத்தை உருவாக்கி கொண்டது காசியில்தான். இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம். இந்த பழக்கம்தான் பாரதிக்கு பிற்பாடு எங்கு சென்றாலும் தொடர்ந்திருக்கலாம். ஒருமுறை அல்ல ஒரு நாளின் பலமுறை பாரதி கங்கையில் நீராடுவதும் கரையில் இருந்தபடி காளிதாசர், ஷெல்லி, கீட்ஸ் கவிதைகளை படிப்பதுமாக இருப்பார். கங்கை கரை படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.

இப்படி பாரதியின் நெஞ்சுக்குள் பாய்ந்து ஒடிக்கொண்டிருந்த தொன்மையான கங்கையையும் அவர் நேசித்த காசியையும் பற்றி நிறைய முறை கேள்விப்பட்ட எனக்கு கடந்த வாரம் அவர் வாழ்ந்த அந்த காசியின் வீட்டை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து அனுமான் காட் என்றால் நூறு ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு போய் இறக்கிவிடுவர். அங்குள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக சிவ மடம் என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழங்கால வீடு ஒன்று உள்ளது.

மாட்டின் எச்சமும், குப்பை கூளமும் நிறைந்த நெரிசலான சந்துக்குள் அமைந்திருக்கும் அந்த பழைய வீட்டிற்கு எப்படி பார்த்தாலும் இருநூறு வயதிருக்கும்.

அதிர்ந்து பேசினாலே வீட்டின் காரை சுவர்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு பழமை மாறாமல் அப்படியேதான் பல இடங்களும் உள்ளது.

அந்த வீட்டில் பலர் இருந்தாலும் நின்று பேச நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
அந்த வீட்டில் பாரதியின் பெருமைகளையும்,நினைவுகளையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரே ஜீவன் கே.வி.கிருஷ்ணன் என்பவர்தான். பாரதியாரின் அப்பாவுடன் பிறந்த குப்பம்மாள் மகள் வழி பையனான இவருக்கு இப்போது வயது 88 ஆகிறது. பாரதி இங்கு இருந்த போது அவர் பிறக்கவேயில்லை.

காசியில் பிறந்து வளர்ந்தவரான இவர் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழைவிட இந்தியில் திறமை அதிகம்.இசையிலும் புலமை உண்டு.
பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் உதவியுடன் பாரதிக்கு சிலை அமைக்கவும் செய்தார்.

பாரதியின் மாப்பிள்ளை என்பதே என் பாக்கியம் அதைவிட வேறு எதுவும் வேண்டாம் என்ற நிலையில் உள்ளவர்.தற்போது மிகவும் தளர்ந்து போய் உள்ளார். கேட்கும் திறனும் குறைந்து விட்டது.

ஆனாலும் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து ஒருவன் பாரதி வாழ்ந்த வீட்டை பார்வையிட வந்துள்ளானே என்ற ஆர்வம் காரணமாக சிரமப்பட்டு எழுந்து பாரதி உலாவிய இடங்கள் இவை, அவர் உபயோகித்த பொருட்கள் இவை என்று பழுதடைந்து, பாழடைந்த கிடந்த நாற்காலி மேஜை போன்றவைகளை தூசு தட்டி காண்பித்த போது அந்த இடம் பாரதி வாழ்ந்த இடமாக அல்ல இப்போதும் வாழும் இடமாகவே பட்டது.
முன்பு காரைச்சுவர்களுக்குள் இருந்தார் இப்போது இவரது இதய சுவர்களுக்குள் இருக்கிறார்.


No comments:

Post a Comment