Friday 9 August 2013

மேட்டூர் அணையை வடிவமைத்த என்ஜீனியர் எல்லீஸ்...



மேட்டூர் அணையை வடிவமைத்த என்ஜீனியர் எல்லீஸ்...
- எல்.முருகராஜ்













இது நமது மண் இங்கேதான் நாமும்,நமது தலைமுறையும வாழப்போகிறோம், வளரப் போகிறோம். இருந்தும் நம்மில் பலருக்கு இங்கே நம் தாய் மண்ணில் ஒரு மரம் நடக்கூட நேரமில்லை, ஆனால் நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்.

அவர்தான் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
அணையின் பிரதான பகுதியில் ஆள் உயர சிலையாக நின்று தான் வடிவமைத்த அணையை பார்த்தபடி நின்று கொண்டு இருக்கிறார்.

இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.

மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தர விட்டார். இந்த உத்திரவை போட்ட கவர்னர் ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.

இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம். அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறு விளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934

அணைக் கட்ட ஆன செசலவு 4.80 கோடி

அணையின் நீளம் 5.300 அடி

அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.

அணையின் உயரம் 214 அடி

அணையின் அகலம் 171 அடி

அணையின் சேமிப்பு உயரம் 120 அடி

அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சசதுர மைல்

2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.

அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன.
மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.

இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும்,பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் ,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்லீசை, அணையும் நம் மனசும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.

முக்கிய குறிப்பு: கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கால தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் இருந்த தோற்றத்தையும் பின் அணை படிப்படியாக கட்டப்பட்ட தோற்றத்தையும் பழங்கால அபூர்வ படங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment