Tuesday 14 May 2013


நேற்று மாநகராட்சி பள்ளி மாணவி, இன்று நாடு பாராட்டும் ஆடிட்டர் பிரேமா..
- எல்.முருகராஜ்




கடந்த வாரத்தில் ஒரு நாள்.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இந்தியன் பாங்க் அரங்கம்.

அரங்கத்தில் குழுமியிருந்த மொத்த பார்வையாளர்களும் மேடையேறப்போகும் அன்றைய விழாவின் கவுரவ இளம் விருந்தினரைக்காண ஆவலுடன் காத்திருந்தது.

நாட்டிலேயே கடினமான படிப்பான கணக்காயர் (ஆடிட்டர்) படிப்பில் தகுதி பெற்றாலே போதும் என்று அந்த தேர்வை எழுதும் கணக்கிலடங்காத பலர் நினைத்திருக்க, அதில் முதன்மை பெற்றவர் இவர். முதல் கட்டத்தில் தேர்வாவதே கடினம் என்ற நிலையில் உள்ள சி.ஏ.,தேர்வில், அகில இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்வான, மும்பை வாழ் ஆட்டோ டிரைவரின் மகளும், தமிழ்ப் பொண்ணுமான பிரேமாதான் அந்த இளம் விருந்தினர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், ஊரில் விவசாயம் பார்க்க வழியில்லாமல் வறுமை விரட்ட, மும்பைக்கு பிழைப்பு தேடி மனைவி லிங்கம்மாள் மற்றும் மகள் பிரேமா, மகன் தன்ராஜ் ஆகியோருடன் சென்றார். அப்பாவுடன் சென்ற பிரேமாவுக்கு அப்போது வயது இரண்டு. இப்போது வயது 24.

மும்பை மாலாட் பகுதியில் ஆட்டோ ஒட்டி பிள்ளைகள் இரண்டையும் படிக்கவைத்தார்.

இரண்டு வயதில் மும்பைக்கு சென்ற பிரேமா அங்குள்ள மாநகராட்சி பள்ளியில்தான் பிளஸ் டூ வரை படித்தார். பின்னர் பி.காம் படிப்பை மும்பை பல்கலைக்கழகத்தில் முடித்த போது பல்கலைக் கழக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார், பின்னர் அனைவரும் படிக்கத் தயங்கிய சார்ட்டர்ட் அக்கவுண்ட் எனப்படும் சி.ஏ.,படிப்பை படித்தார். ஒரு பக்கம் சி.ஏ., படித்துக் கொண்டே இன்னொரு பக்கம் எம்.காம் படித்தார். எம்.காம் படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவி என்ற பட்டத்தை பெற்றார்.

பின்னர் நடந்த சி.ஏ., தேர்வில் அகில இந்திய அளவில் 800க்கு 607 மார்க்குகள் வாங்கி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

குவிந்த ஊடகங்கள் முன் சுருக்கமாக பேசினார்.

என் தந்தை இருபது வருடமாக ஆட்டோ ஒட்டிவருகிறார், எங்கள் வாடகை வீடானது மாலாட் பகுதியில் 325 சதுர அடி கொண்டதுதான். அதில் நானும் என் தம்பியும் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி கொடுத்த என் தந்தை எந்த சூழ்நிலையிலும் எங்கள் படிப்பு பாதிக்காத அளவில் எங்களுக்காக உழைத்தார்.

நாங்களும் எங்கள் கவனத்தை சிதறவிடாமல் படித்தோம், நல்லதொரு ரேங்க் வாங்குவேன் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அகில இந்திய அளவில் முதல் மாணவியாக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை, இந்த வெற்றியை என் பெற்றோர்களின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன், என்றார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு பலரும் பரிசு வழங்கி கவுரவித்தனர். தமிழக முதல்வர் பத்து லட்சமும், மத்திய அமைச்சர் வாசசன் ஐந்து லட்சமும், திமுக தலைவர் கருணாநிதி ஒரு லட்சமும் வழங்கியதும் அதில் அடக்கமாகும்.

அது மட்டுமல்லாமல் அவருக்கு வேலை தர பல முன்னணி நிறுவனங்களும் போட்டிபோட்டு முன் வந்தன.
அந்த நிறுவனங்களில் இந்தியன் பாங்கும் ஒன்று.

கடைசியில் இந்தியன் பாங்க் அதிகாரியாக அவருக்கு பொறுப்பு வழங்கும் விழாவையும், அவரை பாராட்டி கவுரவிக்கும் விழாவினையும் ஒரு சேர நடத்தியது.

விழா மேடை ஏறி பொறுப்பையும், கவுரவத்தையும் பிரேமா ஏற்றுக்கொண்ட போது மொத்த பார்வையாளர்களும் கைதட்டியதில் அரங்கம் அதிர்ந்தது.

ஏற்புரையில் பிரேமா பேசியதுதான் முக்கியமானதாகும்...

எனது இந்த நிலைக்கு காரணம் என் பெற்றோர்கள்தான், என் தந்தை ஜெயக்குமார் என்னை படிக்க வைப்பதற்காக தனது எல்லா மகிழ்ச்சியையும் தியாகம் செய்தவர் அவர், எந்த விடுமுறையும் எடுக்காமல் ஆட்டோ ஒட்டி உழைத்து, உழைத்து எனக்காக தனது நலனையும், உழைப்பையும், பணத்தையும் செலவழித்தவர்.

அதே போல என் தாய், வீட்டில் நான் விடிய, விடிய படிக்கும் போது கூடவே விழித்திருந்தவர், வீட்டில் இருந்த டி.வி.,யை துண்டித்தவர்.

நான் மும்பையில் படித்தாலும் அங்குள்ள தமிழ் பள்ளியில், தமிழ்தான் வேண்டும் என்று கேட்டு படித்தேன். ஏழாவது வரை எல்லா பாடங்களையும் தமிழில்தான் கற்றேன், அதன்பிறகுதான் தமிழ் தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படித்தேன்.

எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தபோது அக்கவுண்ட படிப்பில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண் எண்ணத்தை தெரிவித்தபோது, மறுப்பேதும் சொல்லாமல் என் உணர்வை புரிந்துகொண்ட என் பெற்றோர்களுக்கு வாழ்நாளெல்லாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இனி அவர்களை வீட்டில் உட்காரவைத்து நல்ல ஒய்வையும், சந்தோஷத்தையும் தருவதே என் முதல் கடமை, மேலும் சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரியான முறையில் முயன்றால் வெற்றி கிடைக்கும் என்ற என் அனுபவத்தை, இப்படிப்பை தேர்வு செய்து படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன், படிக்க ஆர்வம் இருந்தும் பணமின்றி கஷ்டப்படும் மாணவர்களுக்கு வாழ்நாளெல்லாம் முடிந்தவரை உதவிட எண்ணியுள்ளேன்.
கடின உழைப்பும், நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் யாருமே உயரத்தை மட்டுமல்ல சிகரத்தையும் தொடலாம், என்று பிரேமா கூறி முடித்த போது இரண்டாவது முறையாக கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

No comments:

Post a Comment